கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுவதற்குமுன் மாணவர்கள், `வரதட்சணை கொடுக்க மாட்டோம், வாங்க மாட்டோம்’ என உறுதிமொழி ஏற்க வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கபட்டுள்ளது. மேலும், அதை மீறுபவர்களின் கல்வித் தகுதி ரத்து செய்யப்படும் என்றும் உறுதிமொழிப் பத்திரம் எச்சரிக்கிறது.
Also Read: வரதட்சணைக் கொடுமை: 5 ஆண்டுகளில் 66 பெண்கள் தற்கொலை; மாவட்டந்தோறும் அதிகாரிகளை நியமித்த கேரளா!
கடந்த நான்கு மாதங்களில் மட்டும் கேரளாவில் வரதட்சணை கொடுமையின் காரணமாகப் பல மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதனையடுத்து வரதட்சணைக் கொடுமையைக் கட்டுப்படுத்த கேரள அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரளாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் `வரதட்சணை வாங்க மாட்டோம், கொடுக்க மாட்டோம்’ என்று உறுதிமொழி ஏற்ற பின்னரே மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்கள் அளிக்கப்படும் என்ற விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கோழிக்கோடு பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் 391 கல்லூரிகளில் பல மாணவர்கள் இந்த உறுதிமொழியை ஏற்ற பின்னரே பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். முன்னதாக, கடந்த வாரத்தில் கேரளாவின் மீன்வளம் மற்றும் கடல் சார் பல்கலைகழகத்தில் 386 மாணவர்கள் இதுபோன்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
முன்னதாக, ஜூலை மாதம் கேரளாவின் ஆளுநர் ஆரிப் முகமது கான் இந்த யோசனையைக் கூறியிருந்தார். சில நாள்கள் கழித்து கேரள அரசும் அதனை ஏற்றுக் கொண்டதால், தற்போது பல்கலைக்கழகங்களில் இது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.