வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில நிர்வாகி வசீம் அக்ரம் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாணியம்பாடியில் வசீம் அக்ரமை, ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொன்றுவிட்டு காரில் தப்பியது. இந்த வழக்கில் பிரசாந்த், டெல்லி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலையில் தொடர்புடைய மேலும் 6 பேர் தஞ்சை நீதிமன்றத்திலும், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் கஞ்சா வியாபாரியான இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். கஞ்சா பதுக்கல் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததால் டீல் இம்தியாஸ் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில், கொலைக்கு உதவியதாக வாணியம்பாடியைச் சேர்ந்த நயீம் பாஷா, பைசல் அகமது உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்ய ஆயுதங்களை கொண்டு சேர்த்தல், ஆள் நடமாட்டத்தை கண்காணித்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். இவர்கள் 4 பேர் உள்பட இதுவரை இந்த வழக்கில் 13 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி அலுவலக ஆய்வாளர் பழனி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.