கடந்த 6 மாதங்களுக்கு முன் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டேன். குணமான பிறகு வாசனைகளை உணரும் திறனில் வித்தியாசத்தை உணர ஆரம்பித்தேன். அதாவது வழக்கமான வாசனைகள் எல்லாவற்றையும் விரும்பத்தகாத மணங்களாக உணர்கிறேன். இதை எப்படிப் புரிந்துகொள்வது? கோவிட் பாதிப்பில் மணம், சுவை உணரும் தன்மை பாதிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இது வேறு மாதிரி உணர்வாக இருக்கிறதே…. என்னவாக இருக்கும்? குணப்படுத்த முடியுமா?

– கைலாஷ் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் ராமகிருஷ்ணன்.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை நோய்களுக்கான சிகிச்சை மருத்துவர் ராமகிருஷ்ணன்.

“கோவிட் தொற்றில் வாசனையை உணரும் தன்மையை இழப்பதை `அனாஸ்மியா’ என்கிறோம். வழக்கமான வாசனைகளை முழுமையாக உணர முடியாத நிலையை `ஹைப்பாஸ்மியா’ என்றும், வழக்கமான வாசனைகளே வேறு மாதிரியான வாசனைகளாக உணர்வதை `பாராஸ்மியா’ (Parosmia) என்றும் சொல்கிறோம். வாசனைகளை உணரச் செய்கிற odour binding protein செயல்பாட்டில் ஏற்படும் கோளாறுகளால் இப்படி வாசனைகளை மாறி உணர்கிற நிலை ஏற்படும். அதாவது வழக்கமாக நாம் வெறுக்கும் சடலம், மலம், சாக்கடை, அழுகிய பொருள்கள் போன்றவற்றின் மணத்தை உணர்கிற நிலைதான் பாராஸ்மியா.

Also Read: Covid Questions: ஆர்த்ரைட்டிஸுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்வோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

கோவிட் தொற்றின்போது சுவை மற்றும் வாசனைகளை உணரும் திறனை இழப்பதை ‘அனாஸ்மியா’ என்கிறோம். அது தொற்றிலிருந்து குணமானதும் தானாகச் சரியாகி விடும். ஸ்டீராய்டு மாத்திரையோ, நேசல் ஸ்பிரேயோ உபயோகிக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதிகபட்சமாக ஒரு மாதத்தில் சரியாகிவிடுகிறது. இதில் `பாராஸ்மியா’ என்றொரு தீவிர நிலை இருக்கிறது. அனாஸ்மியா போன்று பாராஸ்மியா அவ்வளவு எளிதில் சரியாவதில்லை.

என்ன மருந்துகள் கொடுத்தாலும் அது தீவிரமாகிக்கொண்டேதான் இருக்கும். இந்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கு `ஸ்மெல் டிரெயினிங்’ கொடுக்க வேண்டியிருக்கும். அதாவது இது காபி…. இது பூ…. இது கற்பூரம்’ என நல்ல மணங்களைக் கொண்டவற்றின் வாசனைகளை சம்பந்தப்பட்ட நோயாளிகளை உணரச் செய்து, அவர்களது மூளையைப் பழக்கும் பயிற்சி இது. இள வயதினராக இருந்தால் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் குணப்படுத்திவிட முடிகிறது. அதுவே வயதானவர்களுக்கு பாதித்தால் எந்த அளவுக்கு குணப்படுத்த முடியும் என்பதற்கான தரவுகள் நம்மிடம் இல்லை. தவிர அல்ஸைமர், பார்க்கின்சன், தீவிர சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கும், புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்களுக்கும்கூட பாராஸ்மியா பாதிப்பு வரக்கூடும்.

Corona Virus – Representational Image

Also Read: Covid Questions: கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நினைவிழப்பு ஏற்படுமா?

கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான 100 பேரில் இரண்டு அல்லது மூன்று பேருக்கு பாராஸ்மியா பாதிப்பு வர வாய்ப்புள்ளது. யாருக்கு வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அரிதாகச் சிலரையே பாதிக்கும். அப்படியே வந்தாலும் குணப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையளித்து சிகிச்சை அளிக்க வேண்டும். கோவிட் தொற்றாளர்களில் சிலருக்கு இதைக் குணப்படுத்த முடியாத நிலையில் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து வேறு பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதையும் உறுதிபடுத்த வேண்டும். கோவிட் தொற்றுக்குள்ளானவர்கள் மட்டுமல்ல, மனநல பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் இந்த பாராஸ்மியா பாதிப்பு வருவதுண்டு.

கோவிட் வந்தாலே வாசனையும் சுவையும் உணரும் தன்மை போவது இயல்பு என அலட்சியம் வேண்டாம். மருத்துவரைக் கலந்தாலோசிப்பது அவசியம். ஒருவேளை வழக்கமான வாசனைகளே விரும்பத்தகாத வாசனைகளாக உணர நேர்ந்தால் இன்னும் கவனம் தேவை. அது பாராஸ்மியாவா என்பதையும் உறுதிபடுத்த வேண்டும்.”

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions’ பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.