விகடனின் Doubt of Common Man பக்கத்தில் ராஜாராமன் என்ற வாசகர், “பங்குச் சந்தையில் நிப்டி, சென்செக்ஸ் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்களே அப்படி என்றால் என்ன?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
பங்குச்சந்தை என்ற வார்த்தையைத் தினம்தோறும் செய்திகள் மற்றும் பத்திரிகை வாயிலாக நாம் கேட்டு வந்தாலும், அது எப்போதும் நமக்கு அந்நியமான ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. நிறைய பேருக்குப் பங்குச்சந்தையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். பங்குச்சந்தை என்றவுடன் முதலில் நம் நினைவுக்கு வருவது நிப்டி மற்றும் சென்செக்ஸ் என்ற வார்த்தைகள்தான். நிப்டி வீழ்ந்தது, சென்செக்ஸ் உயர்ந்தது எனச் செய்திகளிலும் நிறையக் கேட்டிருப்போம். சரி, இந்த நிப்டி மற்றும் சென்செக்ஸ் என்றால் என்ன, அவை எதைக் குறிக்கின்றன எனத் தெரியுமா. அப்படி ஒரு சந்தேகம்தான் நம் வாசகருக்கும் எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.
Also Read: கொரோனா குணமாகி எத்தனை நாள்களில் தடுப்பூசி போடலாம்? | Doubt of Common Man
நம் வாசகரின் கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ளும் பொருட்டு பொருளாதார நிபுணர் வ.நாகப்பன் அவர்களிடம் பேசினோம். இது குறித்து அவர் கூறியதாவது, “இந்தியாவில் பிரதானமாக இரண்டு பங்குச் சந்தைகள் இருக்கின்றன. தேசிய பங்குச் சந்தை (NSE – National Stock Exchange) மற்றும் மும்பை பங்குச் சந்தை (BSE – Bombay Stock Exchange). தேசிய பங்குச்சந்தையில் 2000 பங்குகளுக்கும் மேல் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. மும்பை பங்குச் சந்தையில் 4500 பங்குகளுக்கும் மேல் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
நிப்டி (NIFTY) என்பது தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் NSE Fifty என்பதன் சுருக்கமே NIFTY. தேசிய பங்குச்சந்தையில் இருக்கும் ஐம்பது சிறந்த பங்குகளை வைத்தே நிப்டி கணக்கிடப்படுகிறது.
சென்செக்ஸ் (SENSEX) என்பது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண். Sensitive Index என்பதன் சுருக்கமே சென்செக்ஸ். மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் முப்பது சிறந்த பங்குகளை வைத்தே சென்செக்ஸ் கணக்கிடப்படுகிறது.
இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்கள்!
இந்தியப் பங்குச்சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது எனத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு குறியீடு தேவைப்படுமல்லவா? அதற்காகத்தான் இந்த இரண்டு குறியீடுகளையும் இரண்டு பங்குச்சந்தைகளும் பயன்படுத்துகின்றன. தேசிய பங்குச்சந்தையில் 2000 பங்குகளுக்கு மேல் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. மும்பை பங்குச்சந்தையில் 4500 பங்குகளுக்கும் மேல் பட்டியலிடப்பட்டிருக்கின்றன எனக் கூறியிருந்தேன் அல்லவா?! இத்தனை பங்குகளின் ஏற்ற இரக்கத்தையும் கண்காணித்து ஒரு குறியீடு சொல்வது என்பது கடினம்.
எனவே தான் நிப்டியில் சிறந்த 50 பங்குகளை வைத்தும், சென்செக்ஸில் சிறந்த 30 பங்குகளையும் வைத்துக் கணக்கிடுகிறார்கள். மேலும், சந்தையில் 2000 பங்குகள் பட்டியலிடப்பட்டு இருந்தாலும் தோராயமாக முதல் 200 முதல் 250 பங்குகள்வரைதான் சந்தை மதிப்பு அதிகம் கொண்ட பங்குகளாக இருக்கும். நிப்டி மற்றும் சென்செக்ஸில் இருக்கும் பங்குகளின் ஏற்ற இறக்கத்தை வைத்து, இந்தியப் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்கிறதா அல்லது இறக்கத்தில் இருக்கிறதா எனக் கூறிவிடலாம்.
Also Read: பங்கு வர்த்தகத்தில் புதிதாக ஈடுபடுபவர்கள் கவனிக்க வேண்டியவை என்னென்ன? | Doubt of Common Man
இந்த இரண்டு குறியீட்டு எண்களுக்கான பங்குகளை எப்படித் தேர்ந்தெடுப்பார்கள் என்றால், அதற்கும் சில அளவுகோல்கள் இருக்கின்றன. இந்தக் குறியீட்டு எண்ணை நிர்வாகம் செய்வதற்காகத் தனியாக ஒரு குழுவே இருக்கிறது. ஒரு துறையில் இருக்கும் பங்கு என்று இல்லாமல் பல துறைகளிலும் இருக்கும் முன்னணிப் பங்குகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தக் குறியீட்டு எண்களுக்கான பங்குகள் குறிப்பிட்ட சந்தை மதிப்புக்கு மேலே இருக்க வேண்டும், வாங்கும் விற்கும் விலைக்கிடையே அதிக வித்தியாசம் இல்லாமல் அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்காக இருக்க வேண்டும், இது போன்ற சில அளவுகோலின் அடிப்படையில் நிப்டி மற்றும் சென்செக்ஸில் இருக்கும் பங்குகளைத் தேர்ந்தெடுப்பார்கள். சிறந்த பங்குகள் எனக் கூறுவதால் நிப்டியில் மற்றும் சிறந்த பங்குகள் எல்லாம் லாபத்தில் இருக்கும் பங்குகளா எனக் கேட்டால் இல்லை. நஷ்டத்தில் இருக்கும் பங்குகள் கூட நிப்டி மற்றும் சென்செக்ஸி இருக்கும். இரண்டு குறியீடுகளிலும் இடம்பெற்றிருக்கக்கூடிய பங்குகளின் நிறுவனங்கள் திறம்பட நடத்தக்கூடிய நிறுவனங்களாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!