இந்தத் தொடரை எழுதும் நான், வாசிக்கும் நீங்கள் என அனைவரும் பணம் சம்பாதிப்பதற்கான முயற்சியில்தான் இருக்கிறோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் பணத்தை சம்பாதிக்கிறோம். ‘பணம் வேண்டாம்’ என்று சொல்பவர்கள் மிக குறைவு. ஒருவேளை ஒருவர் ‘பணம் வேண்டாம்’ என்று சொன்னால், அவர் போதுமான பணத்தை வைத்திருக்கிறார் என்றே அர்த்தம்.

பணம் சம்பாதிப்பதற்கான வழியை நாம் அனைவரும் எப்படியோ கற்றிருக்கிறோம். தகுதிக்கு ஏற்பவோ அல்லது அதற்கு அதிகமாகவோ சம்பாதிப்போம். ஆனால், அதனை சரியாக சேமிக்கிறோமோ, சரியாக முதலீடு செய்கிறோமா என்றால், ‘இல்லை’ என்பதே பெரும்பாலானோருக்கான பதிலாக இருக்கிறது. இதைவிட சேமிப்புக்கும் முதலீட்டுக்குமே நம்மில் பலருக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. சேமிப்பு, முதலீடு, வரி தொடர்பாக பல விஷயங்களை ஒவ்வொரு தனிநபரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் பர்சனல் ஃபைனான்ஸ் குறித்தும் இந்த ‘பணம் பண்ண ப்ளான் B’ தொடரில் விவாதிக்கலாம்.

image

முதலீட்டு வாய்ப்புகள் என்னென்ன? – 30 ஆண்டுகளுக்கு முன்பு முதலீட்டுக்கான வாய்ப்புகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். வீடு, தங்கம், வங்கி, அரசாங்க கடன் பத்திரங்களை தவிர வேறு வாய்ப்புகள் இல்லை. அப்போதும் பங்குச்சந்தை இருந்தாலும், பெரு நகரங்களில் இருப்பவர்களுக்கு மட்டுமே அது பரிச்சயமாக இருந்தது.

image

ஆனால், ஒரே முதலீட்டை பல வகைகளில் முதலீடு செய்ய முடியும். இதுதவிர பல புதிய முதலீட்டு வாய்ப்புகளும் உருவாகி இருக்கின்றன. தற்போது தொழில்நுட்பத்தின் உதவியால் ஒவ்வொரு முதலீட்டுத் திட்டத்திலும் முதலீடு செய்வது எளிதாக மாறி இருக்கிறது. ஆனால், எளிதாக இருக்கிறது என்பதனாலே அந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. ஒவ்வொரு முதலீட்டிலும் அந்தத் திட்டத்தில் இருக்கும் ‘ரிஸ்க்’ மற்றும் வருமானம் ஆகியவற்றை கண்டறிந்த பின்பே முதலீடு செய்வது நல்லது.

மேலே சில முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும் காப்பீடு குறித்து குறிப்பிடவில்லையே என  உங்களுக்குத் தோன்றியிருக்கலாம். காப்பீடு என்பது முதலீடு இல்லை. அது ஒரு பாதுகாப்பு மட்டுமே. படகில் செல்லும்போது லைஃப் ஜாக்கெட் அணிவது, இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது, காரில் ஏர் பேக் இருப்பது போல வாழ்க்கைக்கும் மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு தேவை. இவற்றை முதலீடு என்று சொல்ல முடியாது.

தங்கம்: முன்பெல்லாம் தங்கத்தை நகையாக, நாணயமாக அல்லது கட்டியாக வாங்க முடியும். ஆனால், தற்போது தங்கப் பத்திரங்களில், மியூச்சுவல் ஃபண்டுகள், இடிஎப்கள் என பல வகைகளில் தங்கத்தில் முதலீடு செய்ய முடியும். இதுபோன்ற டிஜிட்டல் வழிகளில் முதலீடு செய்யும்பட்சத்தில் பல இதர செலவுகள் (செய்கூலி, சேதாரம்) தவிர்க்கப்படும். நகையாக வாங்கும்பட்சத்தில் பல செலவுகள் இருக்கும். அப்படியானால் தங்கத்தின் அடக்க விலையிலே மாறும் என்பதால் நகையும் ஒரு முதலீடு என முதலீட்டாளர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்.

அதேபோல், தங்கம் எப்படி இருந்தாலும் விலை உயரும் என்னும் நம்பிக்கை தவறு. இதர முதலீடுகளை போலவே தங்கத்திலும் ஏற்ற இறக்கம் இருக்கும். சர்வதேச அளவில் பல காரணிகள் தங்கத்தை விலையை தீர்மானிக்கின்றன என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

டெபாசிட்: முன்பெல்லாம் வங்கிகள் கொடுப்பதுதான் டெபாசிட். தற்போது சிறிய வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வங்கிகளிலும் டெபாசிட் செய்ய முடியும். போஸ்ட் ஆஃபிஸ் டெபாசிட், கார்ப்பரேட் டெபாசிட், கடன் பத்திரங்கள், தனியார் கடன் பத்திரங்கள் என நிலையான வருமானம் கொடுக்கும் பல திட்டங்கள் உள்ளன.

ரியல் எஸ்டேட்: வீடு, மனை, அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவைதான் ரியல் எஸ்டேட் அன அழைக்கப்பட்டது. தற்போது வேர்ஹவுஸ், வர்த்தக ரீதியிலான பெரிய ரியல் எஸ்டேட், ரியல் எஸ்டேட்டில் ஃப்ராக்‌ஷனல் ஒனர்ஷிப் (Fractional ownership) என பல வடிவங்கள் ரியல் எஸ்டேட்டில் வந்துள்ளன. பங்குச்சந்தையில் முதலீடு செய்வது போல உங்களிடம் இருக்கும் தொகைக்கு ஏற்ப ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய முடியும்.

image

பங்குச்சந்தை: கடந்த இரு ஆண்டுகளில் பங்குச்சந்தையின் ஏற்றம் காரணமாக பல புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைக்கு வந்திருக்கிறார்கள். ஐபிஓ பெரிய வெற்றி அடைந்ததற்கு புதிய முதலீட்டாளர்கள் காரணம். இதுதவிர பங்குகளில் முதலீடு செய்வதும் அதிகரித்திருக்கிறது. (பங்குகளில் தினசரி வர்த்தகம் செய்வது முதலீடு என்று கூற முடியாது. ஆரம்பகட்ட முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பரிசீலனை செய்வது நல்லதல்ல) மேலும், பங்குச்சந்தைக்கு வருவதற்கு முன்பே பட்டியலிடப்படாத நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பும் உருவாகி இருக்கிறது. வென்ச்சர் கேபிடல் அல்லது பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் பட்டியலாகும் முன்பே முதலீடு செய்யும். ஆனால், சிறு முதலீட்டாளர்கள் இந்த வகையான முதலீட்டு வாய்ப்பு கிடைப்பது கடினம்.

image

மியூச்சுவல் ஃபண்ட்: ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு டூல். இதன் மூலம் அனைத்து வகையான முதலீட்டையும் நாம் அணுக முடியும். மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம், கடன் சந்தையில் முதலீடு செய்யலாம், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம், தங்கத்தில் முதலீடு செய்யலாம், ஐடி நிறுவன பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யலாம் என அனைத்து வாய்ப்புகளும் மியுச்சுவல் ஃபண்டில் உள்ளன.

இவை தவிர ஒருவர் எவ்வளவு சேமிக்கவேண்டும், எவ்வளவு கடன் வாங்கவேண்டும் என முதலீட்டில் கற்றுக்கொள்வதற்கு பல விஷயங்கள் உள்ளன. வரியை எப்படி சேமிப்பது உள்ளிட்டவற்றை இந்தத் தொடர் மூலம் பார்க்கலாம்.

“நீங்கள் தூங்கும்போது உங்கள் பணம் பெருகும் வழியை உருவாக்கவில்லை என்றால், நீங்கள் இறக்கும் வரை சம்பாதிக்க வேண்டி இருக்கும்” என்னும் வாரன் பபெட் பொன்மொழியுடன் அடுத்தடுத்த அத்தியாங்களில் அலசுவோம்.

(இன்னும் ப்ளான் பண்ணுவோம்…)

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.