இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா 2007 டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ‘பவுல் அவுட்’ வெற்றியின் நீங்கா நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
இதே நாளில் 14 ஆண்டுகளுக்கு முன்னதாக டி20 உலகக் கோப்பை குரூப் சுற்றில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை பவுல் அவுட் முறையில் வீழ்த்தியது. டர்பனில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் 20 ஓவர்கள் முடிவில் 141 ரன்களை எடுத்திருந்தன. ஆட்டத்தில் முடிவு எத்தப்பட வேண்டிய காரணத்தால் அப்போது ‘பவுல் அவுட்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இப்போது அது சூப்பர் ஓவராக மாறியுள்ளது.
அந்த போட்டியின் பவுல் அவுட்டில் இந்தியாவின் சேவாக், ஹர்பஜன் பந்தை வீசி ஸ்டம்புகளை தகர்த்திருந்தனர். மூன்றாவதாக இந்தியா சார்பில் பந்து வீசியவர் உத்தப்பா.
“ஆட்டம் சமனில் முடிந்ததும் டிரெஸ்ஸிங் ரூமில் ‘பவுல் அவுட்’ குறித்து விவாதித்தோம். அப்போது நான் தோனியிடம் நேராக சென்று ‘நான் பந்து வீசுகிறேன்’ என சொன்னேன்.
கண்களை இமைக்காமல் அடுத்த நொடியே மறுப்பு ஏதும் சொல்லாமல் நிச்சயமாக என்றார்.
அது அவரது சிறப்பான தலைமை பண்பை எனக்கு உணர்த்திய நிகழ்வாக நான் பார்க்கிறேன். நம்மால் முடியும் என்றால் நிச்சயம் அதற்கு அவர் மறுப்பு ஏதும் சொல்ல மாட்டார். அது தான் கேப்டனாக தோனி விளையாடிய முதல் போட்டியும் கூட” என தெரிவித்துள்ளார் உத்தப்பா.
அந்த ஆட்டத்தில் அவர் ஸ்டம்புகளை தகர்த்திருந்தார். அதன் மூலம் இந்தியா வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு சென்றது.
பவுல் அவுட்?
கால்பந்தாட்டத்தில் உள்ள பெனால்டி ஷூட் அவுட் போல இந்த பவுல் அவுட்டை சொல்லலாம். இங்கு ஒரு பவுலர் தனக்கு முன்னதாக உள்ள மூன்று ஸ்டம்புகளை பந்து வீசி தகர்க்க வேண்டும். அது தான் டாஸ்க். 1991 முதல் இந்த வழக்கம் கிரிக்கெட்டில் இருந்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு போட்டிகளில் மட்டுமே அரங்கேறி உள்ளது. அதில் நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இந்தியா vs பாகிஸ்தான் விளையாடி உள்ளன.
இதையும் படிக்கலாம் : NIRF ரேங்கிங்கில் பின்தங்கிய புதுச்சேரி யூனியன் பிரதேச கல்விக் கூடங்கள்