நீட்தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷின் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அதிமுக தெரிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த மாணவர் தனுஷ், திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்துக்கு திமுக அரசுதான் முழுபொறுப்பு ஏற்க வேண்டும் என கூறியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், இறந்த மாணவரின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
மேலும், தனுஷின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதேபோல, சமூகவிரோதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த வசீம் அக்ரம் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அதிமுக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.