கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நிபா வைரஸ் வேகமாக பரவியது. வெளவால்களால் நிபா வைரஸ் பரவுவதாகக் கூறப்பட்டு வந்தது. நிபா தொற்று நோயான நிபா வைரஸ் பாதித்து பத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்தனர். நிபா தொற்றிய நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் லினி என்பவரும் இறந்தவர்களில் ஒருவர். நிபா வைரஸ் பரவலுக்கு பிறகுதான் கொரோனா நோய்த்தொற்று பரவத்தொடங்கியது. நிபா வைரசுக்கு ஏற்படுத்தப்பட்ட முன்னேற்பாடுகள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கேரளத்திற்கு உதவியது. இப்போது கேரளத்தில் கொரோனா நோய்த்தொற்று கவலையளிக்கும் விதத்தில் பரவி வருகிறது. சராசரியாக தினமும் முப்பதாயிரத்துக்கு மேல் புதிய கொரோனா தொற்று ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக முப்பதாயிரத்துக்கு கீழ் புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை வந்துள்ளது. கேரள சுகாதாரத்துறையின் இன்றைய கணக்குப்படி 26,701 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் மொத்தம் 2,47,791 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.
தினசரி கொரோனா பாதிப்பு ரிப்போர்ட்டில் கோழிக்கோடு மாவட்டத்தில்தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இன்றைய பாதிப்பிலும் கோழிக்கோடு மாவட்டத்தில் 3366 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு முதலிடத்தில் இருப்பதாக ரிப்போர்ட் ஆகியுள்ளது. இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோழிக்கோட்டில் 12 வயது சிறுவனுக்கு ஐந்தாறு நாள்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனாலும் காய்ச்சல் தொடர்ச்சியாக 104 டிகிரி இருந்துள்ளது. சில நாள்களாக வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சிறுவன் இன்று அதிகாலை மரணம் அடைந்தான். நிபா பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிறுவனது சாம்பிள்கள் ஏற்கனவே புனேயில் உள்ள வைராலஜி லேபிற்கு அனுப்பி வைக்கப்படிருந்தது. பரிசோதனை முடிவில் சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதியானது.
Also Read: திறந்து கிடக்கும் தமிழக – கேரள எல்லைகள்;
பயணிகளால் கொரோனா பரவும் அபாயம்?!
கோழிக்கோடைச் சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதித்ததால் மரணம் அடைந்ததாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) இரவு புனே ஆய்வகத்தில் இருந்து அறிவுப்பு வந்துள்ளது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதே சமயம் அவர்களுக்கு நிபா வைரஸ் அறிகுறி தென்படவில்லை எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.