’தொட்டிப் பாலம்’ என அழைக்கப்படும் ஆறு கண் பாலத்தைப்பற்றி திருச்சியில் அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. மனச்சோர்வு, மற்றும் விடுமுறை நாள்கள் வந்தால்போதும் இளைஞர்கள் பட்டாளம் முதல் குடும்பங்கள்வரை பொழுதுபோக்கும் இடமாக மாறியிருக்கிறது இந்தப் பாலம். ‘இந்த இடம்தாங்க 90-ஸ், 2K என கிட்ஸ் வகையறாக்களுக்குப் பிடித்த, என்ஜாய் பண்ணக் கூடிய ‘பேவரைட் ஸ்பாட்’ எனச் சொல்கிறார்கள் திருச்சி வாசிகள்.

திருச்சி

பல ஆண்டுக்கால வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட ஆறு, கால்வாய் என எந்த பெயரைக் கொண்டு அழைத்தாலும், அதற்குச் சிறப்புச் சேர்க்கிறது இந்த உய்யக்கொண்டான் கால்வாய். திருச்சி மாவட்டம் மட்டுமில்லாமல் தஞ்சாவூர் மாவட்டத்தையும் சேர்த்து வளம் கொழிக்க வைக்கும் இது, திருச்சியின் மையத்தில் சத்தமே இல்லாமல் ஒரு ஹேங்அவுட் ஸ்பாட்டாக உருவாகியுள்ளது.

ஆம்… திருச்சியின் மையப்பகுதியில் உள்ள குழுமாயி அம்மன் கோவில் அருகில் உள்ள ஆறு கண் பாலம் என அழைக்கப்பட்டு வந்த இடம்தான், தற்போது ’தொட்டிப் பாலம்’ என அழைக்கப்படுகிறது.

காவிரியில் இருந்து பிரிந்துவரும் இந்த உய்யக்கொண்டான் கால்வாயின் தண்ணீரும், புதுக்கோட்டையிலிருந்து உருவாகி ஓடிவரும் கோரையாற்றுத் தண்ணீரும் ஒன்றாகச் சேருமிடத்தில் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆறு மதகுகள் இருந்த காரணத்தினால் ’ஆறு கண்’ என அழைக்கப்பட்டதாகக் கூறினாலும், அதற்கான சான்றுகள் பெரிதாக இல்லை.

குழுமாயி அம்மன் கோயில்

மதகுகள் வழியே உய்யக்கொண்டான் வாய்க்காலில் நீர் திறந்துவிடப்பட, மற்றொரு பக்கத்தில் உபரியாக வெளியேறும் தண்ணீர், குழுமாயி அம்மன் கோயில் அருகில் இயற்கையுடன் இணைந்து நீர்வீழ்ச்சி போன்ற அமைப்பை ஏற்படுத்தி குடமுருட்டி ஆறாக ஓட, இளைஞர்களும் பொதுமக்களும் அதில் விளையாடி மகிழ்கின்றனர்.

Also Read: திருச்சி – ஊறும் வரலாறு – 8: வந்தது தெரியும், போனது எங்கே… ஆங்கிலோ இந்தியர்களின் கதை!

ராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்டது எனக் கூறப்படும் இந்த உய்யக்கொண்டான் கால்வாய் பல பெருமைகளை உள்ளடக்கியது. திருச்சியின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான குழுமாயி அம்மன் கோயிலுக்கு அருகில் அமையப் பெற்றிருக்கிறது இந்த ஆறுகண் பாலம்.

உய்யக்கொண்டான் கால்வாய்

திருச்சியின் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் ரொம்பவே எளிதான வழியில் மிகச் சுலபமாக அடையலாம். போக்குவரத்து நெரிசல் இல்லாமல், பார்ப்பதற்குக் குளுமையாகவும், மிக மிக அமைதியாகவும் உண்மையாகவே சிட்டிக்குள்தான் இருக்கிறோமோ என யோசிக்க வைக்கும் வகையில் இயற்கை அழகுடன் அமைந்திருக்கிறது.

குழுமாயி அம்மன் கோயிலின் பின்புறம்தான் இயற்கையாய் அமையப் பெற்ற அருவியும் அது வழிந்து ஓடும் குடமுருட்டி ஆறும் உள்ளது. ’ஸ்மார்ட்சிட்டி’ திட்டத்தின் கீழ் பொழுதுபோக்கிற்காக இங்குப் பூங்காக்களும் வரவிருப்பதால் மிக அழகான ஓர் இடமாக இன்னும் புத்துயூர் பெற இருக்கிறது. வார இறுதி நாள்களில் மட்டுமல்லாது வார நாள்களிலும் உள்ளூரில் உள்ளவர்கள் இங்கு வந்து நீராடி மகிழ்கின்றனர்.

குடமுருட்டி ஆறு

அதுவும் நண்பர்களுடன் வருகையில் உற்சாகத்திற்குக் குறைவில்லாமல் கொண்டாடலாம். அருகிலுள்ள அனுமன் கோயில், குழுமாயி அம்மன் கோயில் போன்ற கோயில்களுக்கு மட்டுமில்லாமல் இங்கிருக்கும் மற்ற கோயில்களின் தரிசனத்திற்காக வருபவர்களுக்கும் இந்த இடம் ஓர் அருமையான, மனதை இதமாக்கும் இடமாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

செல்லப் பிராணிகளுடன்…

கடவுள் தரிசனத்தைக் காண வந்தவர்களுக்கு இயற்கையின் தரிசனமும் கிடைக்க, ஆரோக்கியமான ஒரு என்ஜாய்மென்டும் ஒருசேரக் கிடைப்பதால், எப்போதும் இந்த இடம் மக்களால் நிரம்பியிருக்கிறது. இருந்தபோதும் அமைதி நிறைந்த சோலையாகவே இருக்கிறது.

இங்கு வழிந்துவரும் நீரின் அருவியில் குளித்துவிட்டு அருகில் உள்ள மரங்களின் நிழலில் ஓய்வு எடுக்கும்போது கிடைக்கும் இன்பம் அலாதியாக இருக்க, நாமும் ஒரு மதிய வேளையில் கிளம்பினோம். திருச்சியில் மையப்பகுதியிலேயே இருந்தாலும் சிறிதளவே மக்களுடன், வெயிலும் இல்லாத, மழையும் இல்லாத கால சூழ்நிலையுடன் மரங்கள் நிறைந்த அந்த சிறிய அருவி நீரின் சத்தம் நம்மை வசீகரித்தது. கூடவே நீரின் குளுமை நம்மை இழுக்க நீரில் இறங்கினோம்.

ஆனந்தக் குழியல் போடும் சிறுவர்கள்

பல அருவிகள், ஆறுகள் என நீராடியிருந்தாலும் உள்ளூரில் இருக்கும் இதுபோன்ற சிறிய விஷயங்களில்தானே மகிழ்ச்சியே உள்ளது. நண்பர்களுடன் விளையாடிக் களைத்துப் போனாலும், நீரிலிருந்து மேலே வர மனமே வரவில்லை. ஆலமரங்களும், அரச மரங்களும் நிறைந்த அந்த இடத்தில் பலரும் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவுகளைச் சாப்பிட, பல தரப்பட்ட மக்களுடன் அந்த இடமே வேறு ஒரு சந்தோசத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

Also Read: திருச்சி ஹேங்கவுட்: உற்சாகக் குளியல், படகுக்குழாம், பூங்கா… முக்கொம்பிற்கு இத்தனை சிறப்புகளா?!

அந்த சந்தோஷத்தை நம்மைப் போலவே அனுபவித்துக் கொண்டிருந்த நண்பர்களுடன் வந்திருந்த சதீஷ் என்பவரிடம் பேசினோம், “திருச்சியில இருக்குற தில்லை நகர்லதான் நான் இருக்கேன். இங்க இருந்து ஏதாவது சுத்திப் பாக்க போகணும்னாலும், பிரெண்ட்ஸ்கூட சேர்ந்து என்ஜாய் பண்ணனும்னாலும் அதுக்கு குறைஞ்சது இருபதில் இருந்து நூறு கிலோ மீட்டர் தூரம்வரை டிராவல் பண்ணனும். நினைச்சாலும் போக முடியாது.

குளியல் போடும் சிறுவர்கள்

நமக்கு எங்காவது போகணும், மனச ரிலாக்ஸ் பண்ணனும் இல்ல இயற்கையா எங்காவது போகணும்னா கூட உடனே போக முடியாது. ஆனா ஆறுகண்தான் எங்களோட அந்த ஏக்கத்தை தீர்த்து வச்சிதுன்னு சொல்லலாம். நாம எட்டிப்பாக்குற எல்லாமே இங்க கிடைக்கும், குறிப்பா இங்க வர்றதுக்கான ட்ராவல் செலவை தவிர வேற எந்த செலவும் இல்ல, எந்த மனக்கஷ்டமும் இல்லாம சந்தோஷமா என்ஜாய் பண்ணலாம்.

ரவுண்டு போகும் இளைஞர்கள்

உடம்போட மனசும் லேசாக, ரொம்பவே சந்தோஷமா இருக்கும். நான் அதிகமா பிரெண்ட்ஸ் கூட வந்தாலும், குடும்பத்தையும், குழந்தைகளையும் கூட்டிட்டு வருவேன். எவ்ளோ சந்தோஷமோ, அவ்ளோ பாதுகாப்பும் இருக்கும்” எனச் சொல்லிப் பூரிக்கிறார்.

ஒரு ட்ரிப்புக்கான சந்தோஷமும், கடவுள் தரிசனமும் ஒரே இடத்தில் கிடைக்கும் இந்த அற்புதமான ஸ்பாட்டை நீங்களும் மிஸ் பண்ணிடாதீங்க!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.