”கொடநாடு விவகாரத்துல, எடப்பாடி பழனிசாமி ஏன் இவ்வளவு பதற்றப்படுறாருன்னு தெரியல. விசாரணையில இவரோடு பேரைச் சொல்லியிருக்கிறதா இன்னும் அதிகாரபூர்வமா தகவல் எதுவும் வரல. பத்திரிகையில வந்த செய்தியை வச்சு, 2 நாள் சபையைப் புறக்கணிக்க வச்சுட்டாங்க. பட்ஜெட்டுக்கு பதில் சொல்றதுக்காக மூணு நாள் உட்கார்ந்து ரெடி பண்ணேன். ஆனா, பேச முடியாமப் போயிடுச்சு. அவர் பேர் கெட்டுடக் கூடாதுங்கிறத விட நான் மக்கள் மத்தியில் பெயர் வாங்கிடக் கூடாதுங்கிறதுல ரொம்ப கவனமா இருக்காரு பழனிசாமி” என தன் ஆதரவாளர்களிடம் பொருமித் தள்ளியிருக்கிறார், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம்.

ஆளுநரிடம் மனு அளித்த அ.தி.மு.க நிர்வாகிகள்

கொடநாடு விவகாரத்தை முன்னிறுத்தி கடந்த புதன்கிழமை சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் சபையை விட்டு வெளியேறினர். தொடர்ந்து, சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கத்தின் முன்பாக அமர்ந்து பதாகைகளை ஏந்தி, தி.மு.கவுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். நேற்று காலை, கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி ஆகிய அதிமுக முன்னணி நிர்வாகிகள் சந்தித்து மனு ஒன்றையும் அளித்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடியான செயல்பாடுகளில் பன்னீர்செல்வத்துக்கு துளியளவும் விருப்பமில்லை என்கிறார்கள், அவருக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகிகள்.

இது குறித்து நம்மிடம் பேசிய நிர்வாகிகள் சிலர்,

” புதன்கிழமை காலையில சபைக்கு போகும்போதே அதிமுக எம்.எல்.ஏக்கள் எல்லோரும் சட்டையில கறுப்பு பேட்ஜ் குத்திட்டுத்தான் போகணும்னு, செவ்வாய்க்கிழமை ராத்திரியே எடப்பாடி உத்தரவு போட்டுட்டாரு. ஆனா, பன்னீர்செல்வத்துக்கு அதுல கொஞ்சம்கூட உடன்பாடே இல்ல. நீங்க நல்லா பார்த்தீங்கன்னா தெரியும், பன்னீர்செல்வம் சட்டையில மட்டும், கறுப்பு பேட்ஜ் இருக்காது. அவர், அதெல்லாம் குத்த முடியாதுன்னு கறாரா சொல்லிட்டாரு. அதுமட்டுமில்ல, சபையை விட்டு வெளியில வந்து பத்திரிகையாளர்கிட்ட அவர் பேசும்போதுகூட, ‘பொய் வழக்கு போடுறாங்க, வாக்குறுதி நிறைவேற்றல, கட்சியை முடக்கப் பார்க்குறாங்க’ன்னு பொதுவாகத்தான் பேசியிருப்பாரு. அவர் வாயில இருந்து கொடநாடுன்னு ஒரு வார்த்தைகூட வந்திருக்காது. பின்னாடி தனக்கு எதுவும் பிரச்னை வந்திடக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்காரு. பத்திரிகையாளர்கள், கொடநாடு பத்தி கேட்டதும் எடப்பாடிதான் பதில் சொல்லியிருப்பாரு. எடப்பாடி கொடுத்த நீண்ட விளக்கம்கூட தேவையில்லை, அப்படிங்கிறதுதான் பன்னீரோட எண்ணம்.

கறுப்பு பேட்ஜ் அணியாத பன்னீர்செல்வம்

ஆளுநரைப் பார்க்கக் கூட, நாம ரெண்டு பேரும் போயிட்டு வந்திடலாம்ணுதான் எடப்பாடி,. ஓ.பி.எஸ்கிட்ட சொல்லியிருக்காரு. ஊடகங்கள்லகூட அப்படித்தான் நியூஸ் வந்துச்சு. ஆனா, வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வைத்தியலிங்கம்னு பெரிய பட்டாளத்தோட எடப்பாடி வந்து இறங்கியிருக்காரு. அங்க எல்லோரையும் பார்த்ததுமே ஓ.பி.எஸ் டென்ஷனாகி, நான் வரல நீங்க போயிட்டு வாங்கன்னு சொல்ல, பேசி சமாதானம் பண்ணித்தான் உள்ள கூட்டிட்டு போயிருக்காங்க. அவரோட, இந்த டென்ஷனுக்கு இன்னொரு காரணமும் இருக்கு,

Also Read: ஸ்ட்ராங் ஸ்டாலின்.. பதறும் எடப்பாடி & கோ! – கொடநாடு கொலை வழக்கும் சில சம்பவங்களும்

கடந்த அ.தி.மு.க ஆட்சியில நிதி அமைச்சரா இருந்தவரு பன்னீர்தான். தி.மு.க அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை, பொருளாதாரம் ரீதியா முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், தன்னோட பெயரை டேமேஜ் செஞ்சுட்டதா அவர் நினைச்சாரு. சட்டமன்றத்துல அதற்கான உரிய விளக்கத்தைக் கொடுப்பேன்னும் பத்திரிகையாளர் சந்திப்புல சொல்லியிருந்தாரு. அதுக்காக மூணு நாள் பல டேட்டாவ ரெடி பண்ணி வச்சிருந்தாரு. ஆனா, அதுக்குள்ள கொடநாடு விவகாரத்தைக் கிளப்பி சபையைப் புறக்கணிக்க வச்சுட்டாங்க. வேற வழியில்லாம 39 பக்க அறிக்கையா அதை வெளியிட்டுட்டாரு.

ஓ.பி.எஸ் அறிக்கை

‘எனக்கு மக்கள் மத்தியில நல்ல பேர் கிடைச்சிடக் கூடாதுங்கிறதுல பழனிசாமி ரொம்பத் தெளிவா இருக்காரு . இந்தப் பிரச்னையை இப்போ கிளப்பியிருக்க வேண்டிய அவசியமே இல்ல. எனக்கு பேர் கிடைச்சிடக் கூடாதுன்னுதான் இப்படிப் பண்ணிட்டாரு’ என புலம்பித் தீர்த்துட்டாரு” என்கிறார்கள். ஆனால், அ.தி.மு.கவில் வேறு சிலரோ ”வேலுமணிக்குச் சொந்தமான இடங்கள்ல ரெய்டு, இப்போ கொடநாடு விவகாரத்துல பழனிசாமிக்கு நெருக்கடின்னு எல்லாத்தையும் பன்னீர் ரகசியமா ரசிச்சிட்டு இருக்கார். கட்சிய தங்களோட கட்டுப்பாட்டுல வச்சிருந்த இரண்டு பேருக்கும் இனி அவங்களோட பிரச்னைகளைச் சமாளிக்கவே நேரம் சரியா இருக்கும். கட்சி ஆட்டோமேட்டிக்காக தன் கைக்கு வந்திடும்னு கணக்குப் போடுறாரு பன்னீர்” என்கிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.