நாட்டிலேயே மிகப்பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக்கொண்டது ஆந்திராவின் திருமலை-திருப்பதி தேவஸ்தானம். ஏழுமலையானின் இந்தக் கோயிலை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்படும் அறங்காவலர்குழு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கலைக்கப்பட்டு தலைவரும், உறுப்பினர்களும் புதிதாக நியமனம் செய்யப்படுகிறார்கள். கடந்த 2019, ஜூன் மாதம் அறங்காவலர்குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட ஒய்.வி.சுப்பா ரெட்டியின் பதவிக்காலம் ஜூன் 21-ம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து, புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுப்பா ரெட்டியே அந்தப் பதவியில் நீடிக்கப்போகிறார் என்ற தகவல் சுழன்றடித்து, ஆந்திர அரசியலைப் பரபரப்பாக்கியது.
சுப்பா ரெட்டி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சித்தப்பா முறை உறவினர். அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர் எனச் செல்வாக்குமிக்க நபராகவும் வலம்வருகிறார். இதனால், சுப்பா ரெட்டியே அறங்காவலர்குழுத் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர் என்றும் முடிவு செய்திருந்தார் ஜெகன் மோகன் ரெட்டி. சுப்பா ரெட்டிக்கு மீண்டும் அறங்காவலர் குழுத் தலைவர் பதவி வழங்கப்படவில்லையென்றால், அவரை ராஜ்ய சபா உறுப்பினர் அல்லது சட்ட மேலவை (எம்.எல்.சி) உறுப்பினர் தேர்தலில் வெற்றிபெறச் செய்து, அமைச்சர் பதவி அளிக்கவும் திட்டம் வைத்திருந்தார் ஜெகன். இதனால், அறங்காவலர்குழுத் தலைவர் பதவியைப் பிடிக்க ஆளுங்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் சிலர் தீவிரமாக லாபி செய்துவந்தனர்.
ஆந்திராவின் தேர்தல் அரசியலுக்குச் சற்றும் குறைவில்லாமல் நடக்கும் அறங்காவலர்குழுத் தேர்வுக்கான போட்டியில் அதிகாரப் பின்னணி, சமூகப் பின்னணி, பணபலம் இருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானத்தின் உள்விவரங்களை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். 04.07.2021 தேதியிட்ட ‘ஜூனியர் விகடன்’ இதழில், ‘‘தேர்தல் அரசியலை மிஞ்சும் திருப்பதி அரசியல்’’ என்ற தலைப்பில், தேவஸ்தான தலைவர், உறுப்பினர் பதவிக்கானப் போட்டா போட்டி குறித்து விரிவான அலசல் கட்டுரையை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையில், ஒய்.வி.சுப்பா ரெட்டியே இரண்டாவது முறை தலைவராக நியமிக்கப்பட போகிறார் என்று சொன்னதோடு, அதில் நடைபெறும் அரசியலையும் விரிவாக அலசியிருந்தோம்.
அதன்படியே, சுப்பா ரெட்டியை மீண்டும் தேவஸ்தானத்தின் தலைவராக நியமனம் செய்து உத்தரவிட்டிருக்கிறார், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி. விரைவில், மற்ற உறுப்பினர்களும் தேர்வுச் செய்யப்பட உள்ளனர். உறுப்பினர் பதவிகளுக்கும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் லாபி செய்துவருவதாகக் கூறப்படுகிறது. இதுமாதிரியான சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காமல், லாபிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அறங்காவலர்குழு உறுப்பினர் நியமனங்களில் தெலங்கானா, தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நான்கு உறுப்பினர்களைக் கேட்டுப் பெற்றனர். தற்போதைய தி.மு.க அரசு கூடுதலாக உறுப்பினர் பதவிகளைக் கேட்டுப் பெற வேண்டும். ஏனெனில், இவர்கள் மூலமாகத்தான் திருப்பதிக்கு வரும் தமிழக பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்கிறார்கள், உள்விவரம் அறிந்தவர்கள்.