இந்திய நாட்டின் ஒலிம்பிக் பதக்க ஏக்கத்தை போக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் எல்லாம் முதல் சுற்றோடு ஒதுங்கிவிட பதக்க நம்பிக்கையை தனது துல்லியமான ஆட்டத்தின் மூலமாக உயிர்ப்போடு இருக்கச் செய்துள்ளார் 23 வயதான குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன். ஒலிம்பிக் பதக்கம் வெல்ல அவருக்கு ஒரே ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகிறது.
இப்போது ஒலிம்பிக் விளையாட்டை கூர்ந்து கவனித்து வரும் ஒவ்வொரு இந்தியரும் சொல்லி வருவது, லவ்லினாவின் பெயரைதான்.
கோலாகாட் டூ டோக்கியோ ஒலிம்பிக்: அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பாரோமுகியா கிராமத்தை சேர்ந்தவர் லவ்லினா. கடந்த 1997-இல் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று பிறந்தவர். மிடில் கிளாஸ் குடும்பம். அவரது அப்பா திக்கேன் சிறிய அளவில் தொழில் செய்து வருகிறார். அவரது அம்மா மமோனி போர்கோஹைன் இல்ல நிர்வாகி. அவருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் உள்ளனர்.
சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வமாக செயல்பட்டு வந்த அவர் இன்று அசாம் மாநிலத்தின் சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவரது வெற்றிக்காக இன்று பலரும் காத்துள்ளனர்.
குத்துச்சண்டையில் ஆர்வம்: தொடக்கத்தில் தனது உறவுக்கார பெண் ஒருவரின் வழியை பின்பற்றி தற்காப்பு கலையான முவாய் தய் (Muay Thai) விளையாட்டில் தான் அவர் பயிற்சி செய்து வந்துள்ளார். “அப்போது அவளுக்கு 13 வயது இருக்கும். ஒரு நாள் அவளது தந்தை இனிப்பு பலகாரத்தை நியூஸ் பேப்பரில் சுற்றிக் கொண்டு வந்து கொடுத்தார். அந்த பேப்பரில் முகமது அலி குறித்த செய்தி இருந்தது. அதை அவள் படித்ததும் தானும் முகமது அலி போல ஆக வேண்டுமென சொன்னாள். அதற்காக உழைத்தாள்” என லவ்லினா பாக்சிங் விளையாட்டுக்குள் வந்த கதையை சொல்கிறார் அவரது அம்மா. அவரும் முகமது அலியின் ரசிகையாம்.
லவ்லினா ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய டிரையலில் தனது திறனை நிரூபித்து காட்டியுள்ளார். அதன் மூலம் முறையான பயிற்சி பெறும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.
அவரது திறன் லைம்லைட்டுக்குள் வந்தது எப்போது? – 2017-இல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார் லவ்லினா. தொடர்ந்து 2018 மற்றும் 2019-இல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பிலும் வெண்கலம் வென்றார். கடந்த மே மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பிலும் வெண்கலம் வென்றுள்ளார்.
ஒலிம்பிக்கில் எப்படி? – வால்டர் வெயிட் (Welterweight) என சொல்லப்படும் 69 கிலோ எடைப்பிரிவில் ஜெர்மனியின் அபெட்ஸ் நடைனை 3 – 2 என்ற கணக்கில் அவர் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் சீன தைபே வீராங்கனையான சென் நீன் சின்னை நாளை (வெள்ளிக்கிழமை) சந்திக்க உள்ளார். அந்த போட்டியில் வெற்றி பெற்றால் லவ்லினா பதக்கம் வெல்வது உறுதி.
நிச்சயம் முகமது அலி பாணியில் அவரது ரசிகையும் தன் நாட்டுக்காக பதக்கம் வென்று கொடுப்பார் என நம்புவோம்.