நாட்டில் மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்காக கூடுதல் அணு எரிசக்தி ஆலைகளை நிறுவுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “நாட்டில் தற்போது 6780 மெகாவாட் திறன் கொண்ட 22 அணு உலைகள் இயங்குவதுடன், 700 மெகாவாட் திறன் கொண்ட காப்-3 என்ற ஓர் அணு உலை கடந்த ஜனவரி 10-ஆம் தேதி, தொகுப்பில் இணைக்கப்பட்டது.
கூடுதலாக 8000 மெகாவாட் திறன் கொண்ட 10 அணுஉலைகள், கட்டமைப்பின் வெவ்வேறு நிலைகளில் உள்ளன. தற்போது அமைக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள திட்டங்கள் நிறைவு பெற்றவுடன், 2031-ஆம் ஆண்டிற்குள் அணு எரிசக்தியின் மொத்த திறன் 22480 மெகாவாட்டை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணு எரிசக்தி சார்ந்த அனைத்து அம்சங்களின் பாதுகாப்பிற்கும் மிக அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது. மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்காக கூடுதல் அணு எரிசக்தி ஆலைகளை நிறுவுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.