இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்துள்ளது இந்தியா. இதன் மூலம் இலங்கையின் வெற்றிக்கு 133 ரன்கள் தேவைப்படுகிறது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்காக கேப்டன் தவான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் 49 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் உடன் இணைந்து விளையாடினார் தவான். 42 பந்துகளில் 40 ரன்களை குவித்து அவர் வெளியேறினார். படிக்கல் 29 ரன்களில் அவுட்டானார்.
பின்னர் வந்த சஞ்சு சாம்சனும் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இறுதி ஓவர்களில் (16 – 20) ஹசரங்கா வீசிய 19வது ஓவர் நீங்கலாக இலங்கை அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி இந்தியாவின் ரன் குவிப்பு வேகத்தை கட்டுப்படுத்தினர். கடைசி ஓவரில் நித்திஷ் ராணா 9 ரன்களில் அவுட்டானார். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை வெல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆடுகளம் பந்துவீச்சிற்கு சாதகமாக இருப்பது போல் தோன்றுகிறது. 133 ரன்கள் என்பது குறைவான இலக்கு என்ற போதிலும் இந்திய அணியினர் சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.