நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 9.5 சதவீதம் மட்டுமே இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்திருக்கிறது. முன்னதாக நடப்பு நிதி ஆண்டின் வளர்ச்சி 12.5 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது. தற்போது கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் வளர்ச்சியிலும் கடும் சரிவு இருக்கும் என ஐஎம்எப் தெரிவித்திருக்கிறது.
ரிசர்வ் வங்கியும் நடப்பு நிதி ஆண்டு வளர்ச்சி 9.5 சதவீதம் மட்டுமே இருக்கும் என கணித்திருக்கிறது. ஆனால் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் ( 2022-23) வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என ஐஎம்எப் தெரிவித்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 2022-23-ம் நிதி ஆண்டின் வளர்ச்சி 6.9 சதவீதம் மட்டுமே இருக்கும் என கணித்திருந்தது கவனிக்கத்தக்கது.
நாடுகளின் வளர்ச்சியில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அதிக அளவிலான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அதனால் அந்த நாடுகளில் பாதிப்பு குறைவாக இருக்கும். ஆனால் இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தடுப்பூசி போடும் வேகம் குறைவாக இருப்பதால் ஜி-20 நாடுகளில் அதிகம் பாதிப்படையும் நாடுகளாக இந்த இரு நாடுகளும் இருக்கும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.
அதேபோல தடுப்பூசி வர்த்தகத்தில் இருக்கும் தடைகளை நாடுகள் நீக்க வேண்டும். அப்போதுதான் வளரும் நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்கும் என ஐஎம்எப் தெரிவித்திருக்கிறது.