மகாராஷ்டிராவில் 11 மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநில அரசு அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மும்பை பணக்காரர்களும் உதவ முன்வர வேண்டும் என்று சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில் கூறியதாவது, “நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
ஆனால் அனைவருக்கும் கொடுக்கவேண்டிய பொறுப்பு இருக்கிறது. மகாராஷ்டிராவிற்கு ஆயிரக்கணக்கானோரின் உதவிக்கரங்கள் தேவையாக இருக்கிறது. உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் சிலர் மும்பையில் வசிக்கின்றனர். அவர்கள் உதவி செய்ய முன்வர வேண்டும். 11 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்திருப்பதோடு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசின் உதவியோடு மாநில அரசு தேவையான உதவிகளைச் செய்துவருகிறது. அதே சமயம் மகாராஷ்டிராவில் வாழும் பணக்காரர்களும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் கவனம் செலுத்தவேண்டும். மஹாட், சதாரா, சாங்கிலியில் வெள்ளத்தால் அழித்துள்ள கிராமங்களைத் திரும்ப புதுப்பித்துக் கட்டமைக்க மும்பையில் வசிக்கும் வசதியானவர்கள் உதவ முன் வரவேண்டும். வெள்ளத்தால் 1028 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன” என்றார். சேதங்கள் குறித்த விபரங்கள் இன்னும் இரண்டு நாட்களில் கிடைக்கும் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சதாரா மாவட்டத்தில் சேத பகுதிகளை பார்வையிட திட்டமிட்டிருந்த முதல்வர் உத்தவ்தாக்கரே மோசமான வானிலை காரணமாக தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். இம்மாவட்டத்தில் மட்டும் மழைக்கு 41 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 27 பேரை காணவில்லை. சாங்கிலி மாவட்டத்தில் துணை முதல்வர் அஜித்பவார் படகுகள் மூலம் சென்று வெள்ளப்பகுதிகளை பார்வையிட்டார்.