விருதுநகர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், கல்வித் தொலைக்காட்சியில் நடத்தும் பாடங்களைப் முறையாகப் பின்பற்றி பயின்று வரும் மாணாக்கர்களுக்கு பரிசளித்து ஊக்கப்படுத்தி வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசு வைத்தான்பட்டியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் ஜெயக்குமார். கொரோனா பொதுமுடக்கத்தால் பள்ளி திறக்கப்படாத நிலையில், மாணாக்கர்கள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் உண்டியலைப் பரிசளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களை தொடர்ந்து பயில அறிவுறுத்தி வரும் தலைமை ஆசிரியர், தினமும் ஒவ்வொருவரின் வீட்டுக்கு சென்று பாடப் புத்தகங்களைப் பார்க்கிறார். மாணவர்கள் செய்து முடித்துள்ள பாடங்களில் வீட்டுப்பாடம், அழகிய கையெழுத்து, பெற்றோரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிதல் என்பன உள்ளிட்ட ஒவ்வொரு அம்சத்துக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்கள் என குறிப்பிடுகிறார்.
அந்த ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு ஒரு ரூபாய் வீதம் என, தான் ஏற்கனவே அளித்துள்ள உண்டியலில் போட்டு ஊக்கப்படுத்துகிறார். உண்டியல்களில் தொடர்ந்து சேரும் காசுகளை மாணாக்கர்கள் ஐந்தாம் வகுப்பு முடிக்கும்போது அவர்களுக்கே பரிசளிக்க உள்ளதாக தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் கூறுகிறார்.