திருடிய வண்டியை தள்ளமுடியாமல் வீட்டின்முன் போட்டு விட்டு தப்பி ஓடிய கொள்ளையன் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் பகுதிகளில் தொடர்ச்சியாக வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் மர்மநபர்களால் திருடப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக மதுரை ஆரப்பாளையம், கரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டு அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 இருசக்கர வாகனங்கள் மதுரை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் திருடு போவதாக வழக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், பெத்தானியபுரம் பகுதியில் உள்ள மசூதி அருகில் பாரத் இம்மானுவேல் என்ற இளைஞரின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை நள்ளிரவில் அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர் திருடிச் செல்கிறார். மேலும் அந்த இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியாததால் அங்கிருந்து உருட்டி செல்ல முயல்கிறார்.
இதைத் தொடர்ந்து வண்டியின் எடை அதிகமாக இருந்ததால் வெகுதூரம் எடுத்துச்செல்ல முடியாது என்பதாலும், காவல் துறையிடம் மாட்டிக்கொள்வோம் என்பதாலும் வண்டியை திருடிய வீட்டின் முன்பே மீண்டும் அந்த இளைஞர் வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்து திரும்பிச் செல்கிறார். இது குறித்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமாராவில் பதிவாகிய நிலையில், திருட்டில் ஈடுபட்ட இளைஞர் குறித்து கரிமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.