பிரசாந்த் கிஷோர் – ராகுல் காந்தி சந்திப்பை தொடர்ந்து பல்வேறு விஷயங்கள் தேசிய அளவிலான அரசியலில் பேசப்பட்டு வருகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தல் முதல் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி வரை, இந்தச் சந்திப்பு தொடர்பாக பேசப்பட்டு வரும் தகவல்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியது தேசிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவாருடனான தொடர்ச்சியான சந்திப்புகளை அடுத்து, இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளதையும் கவனிக்க வேண்டும்.

image

பிரசாந்த் கிஷோரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் சில சலசலப்புக்கு வழிவகுத்துள்ளன. அவற்றில் ஒன்று அடுத்த குடியரசுத் தலைவர் பதவியை வகிக்கப் போகிறவர் பற்றியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் முடியவுள்ளதை அடுத்து, அடுத்த குடியரசுத் தலைவராக சரத் பவாரைத் தேர்ந்தெடுப்பதற்காக பிரசாந்த் கிஷோர் முயற்சி செய்வதாக இந்தச் சந்திப்புகளை வைத்து தேசிய அரசியலில் யூகங்கள் கிளப்பப்பட்டு வருகிறது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மூன்று முறை சரத் பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார் பிரசாந்த் கிஷோர். இதில் ஒருமுறை எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது, அடுத்த பொதுத்தேர்தலில் பாஜகவை வலுவாக எதிர்க்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, மூன்றாவது அணி அமைக்க முற்படுகிறார் என பேசப்பட்டது. ஆனால், அத்தகைய பேச்சுக்களை திட்டவட்டமாக மறுக்கப்பட்டதோடு, மூன்றாவது முன்னணி அல்லது நான்காவது முன்னணி பாஜகவுக்கு சவால் விடும் என்று தாம் நம்பவில்லை என்று வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டது. நடப்பு விஷயங்களை பற்றி ஆலோசிக்கவே எதிர்க்கட்சிகள் கூட்டம் என தெரிவிக்கப்பட்டது.

இப்படியான நிலையில் தான் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை சந்தித்திருக்கிறார் பிரசாந்த். குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசிக்க இந்தச் சந்திப்பு என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக கைகாட்டுபவரே குடியரசுத் தலைவர் ரேஸில் முந்தமுடியும் என்கிற நிலைக்கு இருக்கும்போது, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து, பொதுவேட்பாளரை நிறுத்துவதன் மூலம், பாஜகவுக்கு ஒரு பின்னடைவு ஏற்படுத்த முடியும் என்பது பிரசாந்தின் எண்ணமாக இருக்கிறது.

Prashant Kishor meets Congress leaders Rahul, Priyanka Gandhi; major  decision over Punjab likely - India News

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் நவீன் பட்நாயக் இந்த விஷயத்தில் எப்படி செயல்படுவார் என்பதை சொல்ல முடியாது. இதையடுத்து பட்நாயக்கை பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் காங்கிரஸ் கட்சி ஆதரவும் முக்கியமானது.

மம்தா பானர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டி, அரவிந்த் கெஜ்ரிவால், ஸ்டாலின் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோருடன் நல்ல தனிப்பட்ட உறவு பேணும் பிரசாந்த் கிஷோருக்கு, அவர்களை ஆதரவளிக்க வைப்பது எளிதனதாக்க இருக்கும். ஆனால் காங்கிரஸ் கட்சி என்ன முடிவெடுக்கும் என்பது புதிர் நிறைந்தது. இதையடுத்தே ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடத்தினார் என்று கூறப்படுகிறது. ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தியது இந்தக் கூற்றுக்கு வலுசேர்ப்பதாக உள்ளது.

image

பிரசாந்த் கிஷோர் தனது திட்டங்கள் குறித்து காங்கிரஸ் தலைமைக்கு விரிவாக எடுத்துரைத்ததாகவும், அவர்கள் சரத் பவாரை ஆதரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, இந்தச் சந்திப்பை வைத்து இன்னொரு தகவலும் உலா வருகிறது. பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார் என்பதுதான் அந்த தகவல். ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோருடனான சந்திப்பில் இதுபற்றி விவாதிக்கவும், அப்படி இணைந்தால், 2024 தேர்தல் களத்திற்கு காங்கிரஸை தயார்படுத்துவதில் கிஷோர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் பேசப்படுகிறது.

– மலையரசு

தகவல் உறுதுணை: இந்தியா டுடே, என்டிடிவி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.