முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்!

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை புகார்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை ஒருவர் அளித்த புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜாமீன் மனு மீதான விசாரணையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு இருக்கிறது. `அவரின் பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தனது ஜாமீன் உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு வாரங்களுக்கு அடையாறு மகளிர் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 43,733 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில், மொத்த கொரோனா பாதிப்பு 3,06,20,594 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 930. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,04,211-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சிகிச்சைப் பிரிவு

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,97,99,534-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 4,59,920 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 47,241 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரத்து!

மோடி அமைச்சரவைக் கூட்டம்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடத்த திட்டமிடப்பட்ட பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் (சி.சி.இ.ஏ) மற்றும் அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.