பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸ் தேசிய தலைமை தீவிரமாக களமிறங்கியுள்ளது. பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கு எதிராக போர்க்கொடி ஏந்தி, டெல்லியில் முகாமிட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்துவை ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் சமரச செய்யும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமையன்று சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பஞ்சாப் மாநில காங்கிரஸ் நிலவரம் குறித்து தீவிர ஆலோசனை நடத்தியதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் தேசிய தலைமை விரைவில் அம்ரீந்தர் சிங்குடன் ஆலோசனை நடத்தி, சித்து – அம்ரீந்தர் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இது தொடர்பாக கட்சித் தலைமை மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
ஏற்கெனவே சித்துவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கலாம் எனவும், அவரை சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு பொறுப்பாளராகவும் நியமிக்கலாம் என கட்சித் தலைமை திட்டமிட்டது. ஆனால், சித்து தனக்கு துணை முதல்வர் பதவியை விட கட்சியின் மாநில தலைவர் பதவி முக்கியம் என்று வலியுறுத்தி வருகிறார். சித்துவின் முகாமைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியிலே முடக்கப்பட்டால் வேறுவழியின்றி ஆம் ஆத்மி கட்சிக்கு செல்ல நேரிடும் என கிசுகிசுத்து வருகிறார்கள்.
இதற்கிடையே அர்விந்த் கேஜ்ரிவால் தன் பக்கம் சித்துவை இழுக்க முயற்சி செய்துவருவதாக தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை பஞ்சாப் மாநில உட்கட்சிப் பூசலை விரைவாக முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
காந்தி குடும்பத்தில் தொடர்ந்து நவ்ஜோத் சிங் சித்து செல்வாக்குடன் இருந்து வந்தாலும், பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை அம்ரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் முழுக் கட்டுப்பாடு உடைய தலைவராக விளங்குகிறார். அடுத்த வருட சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அம்ரீந்தர் சிங் இருந்தால்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என கட்சியின் பல தலைவர்கள் கருதுகின்றனர். முந்தைய சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தது அம்ரீந்தர் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து முன்பு பாரதிய ஜனதா கட்சியில் இருந்தார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவராக இருந்தாலும், தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க சித்துவால் முடியாது என்றும், காங்கிரஸ் கட்சிக்கு அமரீந்தர் தேவை என்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.
ஆகவே, உட்கட்சி பூசலை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து, பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற தேவையான நடவடிக்கைகளை இப்போதிருந்தே எடுக்க வண்டும் என கட்சியின் தேசிய தலைமை முனைப்பு காட்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். சித்து எப்போதும் சர்ச்சைக்குரிய ஒரு நபராகவே இருந்து வருகிறார் என்பதும், பஞ்சாப் அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைத்தும், பின்னர் அவர் ராஜினாமா செய்தார் என்பதும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
ஆகவே, கட்சித் தலைமைக்கு நெருக்கமான சித்து ஒருபுறம் என்றும், சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு அமரீந்தர் சிங் இன்னொரு புறம் என்றும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை சமரச முயற்சியை மீண்டும் முடுக்கிவிட்டுள்ளது.
– கணபதி சுப்பிரமணியம்