அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்று பரவலாக பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதிமுக-வை சேர்ந்த சிலரிடம் சசிகலா செல்போனில் பேசிய உரையாடலும் வெளியாகி கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சசிகலாவுடன் பேசிய சிலரை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனத் தெரிவித்தார். சசிகலா பத்து பேரிடம் பேசினாலும், பத்தாயிரம் பேரிடம் பேசினாலும் அதுபற்றி கவலை இல்லை என்றும் அதிமுக உறுதியாக உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.