தமிழகத்தின் வளர்ச்சிக்காக கொள்கை சார்ந்த பல்வேறு திட்டங்களை வகுக்க, மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவில் புதிய நிபுணர்களை நியமித்திருந்தது தமிழ்நாடு அரசு. இக்குழு தனது பணிகளைத் தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக இயற்கை வேளாண்மை பண்ணைகளை ஆய்வு செய்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகிலுள்ள இயற்கை விவசாயி தெய்வசிகாமணியின் இயற்கை வேளாண் பண்ணைக்கு இந்தக் குழு சென்றுள்ளது. இந்தப் பண்ணையைப் பற்றி பசுமை விகடன் இதழில் விரிவாக எழுதியிருக்கிறோம்.

பண்ணையில் மாநில வளர்ச்சிக் குழுவினர்

Also Read: இயற்கை வேளாண் பண்ணையில் இது இருக்க வேண்டும்!

குழுவினரின் ஆய்வு குறித்து இயற்கை விவசாயி தெய்வசிகாமணியிடம் பேசியபோது, “மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவில் உள்ள பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் இந்தப் பண்ணைக்கு மண்புழு பற்றி ஆராய்வதற்காக இதற்கு முன்பே வந்திருக்கிறார். அவர் மாநில வளர்ச்சிக் குழுவில் இடம் பெற்ற பிறகு, இயற்கை வேளாண்மை கொள்கை சம்பந்தமாகச் செயலாற்றி வருகிறார். அவரோடு சித்த மருத்துவர் கு.சிவராமனும் செயலாற்றி வருகிறார்.

சென்ற வாரம் உங்கள் பண்ணைக்கு வருகிறோம் என்று தகவல் தெரிவித்தனர். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை வருகை புரிந்தனர். `எவ்வளவு வருமானம் கிடைக்கிறது, எப்படி பயிர் செய்கிறீர்கள்’ உள்ளிட்ட விவரங்களைக் கேட்டனர். `என்னுடைய தோட்டம் மரப்பயிர்களால் நிறைந்தது.

காட்டிலிலுள்ள மரங்களுக்குத்தான் வனச்சட்டத்தை அமல்படுத்தணும், விவசாய நிலங்களில் விளைவிக்கப்படும் மரங்களுக்கு விற்பனைக்கான வழிகளை எளிதாக்கணும். இவ்வளவுக்கும் வனத்துறை, தோட்டக்கலைத்துறை மூலம் மரக்கன்றுகள் வழங்கப் படுகின்றன. அதே துறைகளின் மூலம் விற்பனையையும் எளிதாக்கணும் என்றேன். `உங்கள் பிரச்னையைக் கவனத்தில் கொள்கிறோம்’ என்றனர்.

ஆய்வுப் பணியில் ஜெயரஞ்சன், சுல்தான் இஸ்மாயில், டி.ஆர்.பி.ராஜா

Also Read: மாநில வளர்ச்சி கொள்கைக் குழு எப்படி செயல்படும்? விளக்கும் முன்னாள் திட்டக் குழு துணைத்தலைவர்!

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் இயற்கை விவசாயம் குறித்து நிறைய கேள்விகளைக் கேட்டார். மாநில வளர்ச்சிக் குழுவில் உள்ள மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவும் விவசாயத்தில் ரொம்ப ஆர்வமுள்ளவராக இருக்கிறார். அவரும் நிறைய கேட்டு தெரிந்துகொண்டார். சுற்றுவட்டாரத்திலிருந்து சில இயற்கை விவசாயிகளையும் வரவழைத்திருந்தோம். அவர்கள் பேசியதிலிருந்து ஒரு விஷயம் புரிந்தது. 2040-க்குள் தமிழகத்தை முழு இயற்கை விவசாய மாநிலமாக மாற்ற சில திட்டங்களை வகுக்க இருக்கிறார்கள் என்பது புரிந்தது. இன்னொன்று இயற்கை விவசாயத்துக்கான கொள்கை கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகவும் தெரிந்தது” என்றார்.

மாநில வளர்ச்சி கொள்கைக் குழு இயற்கை விவசாய பண்ணைக்கு வந்து சென்றிருப்பது இயற்கை விவசாயிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இயற்கை விவசாயத்துக்கான நல்ல திட்டங்கள் வரும் என்று எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.