தமிழகத்தில் நிதிநிலைமை எப்போது சீராகிறதோ அப்போதுதான் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பெட்ரோல், டீசல் விலைகுறைப்பு பற்றி திமுக அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு விளக்கங்களை முன்வைத்தார். அதில், மத்திய அரசின் வரி உயர்வு காரணமாகத்தான் பெட்ரோல், டீசல் விலை ஏறிவருவதாகக் கூறினார். மேலும் தற்போது தமிழகத்தின் நிதி நிலைமை சரியில்லை எனவும், எப்போது நிதி நிலைமை சீராகிறதோ அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், 2014ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி 9 ரூபாயாக இருந்ததை சுட்டிக்காட்டி, அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசு பெட்ரோல் வரியை 28லிருந்து 30ஆக மாற்றியது என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையே, கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளதாகவும், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 75 டாலரை தாண்டியுள்ளதை சுட்டிக்காட்டி தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.