திருவள்ளூர் அருகே பழைய டயர்களை தூளாக்கி மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்சாலையில் பழைய டயர்களை தூளாக்கி மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை அந்த தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையின் காவலாளி அளித்த தகவலின் பேரில் தேர்வாய் கண்டிகை தொழிற்பேட்டையில் உள்ள தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இருப்பினும் தீ மளமளவென எரிந்து அந்த பகுதி முழுவதும் கரும்புகையாக உள்ளதால் அதனை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து, கும்மிடிப்பூண்டியில் உள்ள தீயணைப்பு நிலையம் மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து பயங்கரமாக எரிந்து வருகிறது. அந்த தொழிற்சாலையின் அருகில் கேஸ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இருப்பதால், அங்கு தீ பரவி விடாமல் தீயணைப்பு வீரர்கள் கவனத்துடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.