கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு போட்டி என்றால் அது வரும் வெள்ளிக்கிழமை அன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிதான். இதில் வெற்றி பெறும் அணி அடுத்த சில ஆண்டுகளுக்கு டெஸ்ட் கிரிக்கெட் உலகில் சாம்பியனாக வலம் வரும்.
இந்நிலையில், இந்த சாம்பியன்ஷிப் வெற்றியாளரை தீர்மானிக்க ஒரே ஒரு போட்டி போதுமானதா? என்ற கேள்வியும் எழ செய்கிறது. ஏனெனில் ஷார்டர் பார்மெட் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) கிரிக்கெட் தொடர்களான உலக கோப்பை போட்டிகள் அனைத்திற்கும் ஒரே ஒரு இறுதி போட்டிதான். அதே பாணியை பின்பற்றி தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கும் ஒரே இறுதி போட்டி என ஐசிசி தெரிவித்துள்ளது.
ஏன் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்?
டெஸ்ட் கிரிக்கெட் பார்மெட்டை உயிர்ப்போடு வைத்திருக்கும் நோக்கில் ஐசிசி உறுப்பு நாடுகளுடன் இணைந்து இந்த தொடரை நடத்துகிறது. 2013க்கு பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த திட்டமிட்டது ஐசிசி. அதன்படி டெஸ்ட் கிரிக்கெட் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிக்கு மூன்று போட்டிகளை (அரையிறுதி மற்றும் இறுதி போட்டி) நடத்தி அதன் மூலம் சாம்பியனை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் அது ஏனோ கைகூடாமல் போனது.
தொடர்ந்து 2017 வாக்கில் மீண்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்துவது குறித்து தனது உறுப்பு நாடுகளுடன் பேசி ஒரு சுமூக முடிவை எட்டியது ஐசிசி. அதன்படி 2019 முதல் 2021 வரை நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அணிகளின் செயல்பாட்டை வைத்து புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடம் பிடிக்கும் அணிகளுக்கு இறுதி போட்டி வைப்பது என முடிவானது. அதன்படி தொடங்கிய தொடரில்தான் தற்போது இந்த இறுதி போட்டி நடைபெற உள்ளது.
வெற்றியாளரை தீர்மானிக்க மூன்று போட்டிகள் வேண்டும்!
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள சில மணி நேரம் இருந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மாதிரியான தொடர்களின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஒரு தொடர் வேண்டும் என சொல்லியிருந்தார்.
“இரண்டரை ஆண்டுகள் நடத்தப்படும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டியை மூன்று ஆட்டங்களாக நடத்தியிருக்க வேண்டும். ஒரே ஆட்டத்தின் மூலம் வெற்றியாளரை தீர்மானிப்பது சரியல்ல. வருங்காலத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தொடர்ந்து நடத்த விரும்பினால், இறுதிப்போட்டியை மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடராக நடத்துவதே சிறந்தது” என ரவி சாஸ்திரி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அது எதார்த்த உலகில் சாத்தியமானதாக அமையாது – ஐசிசி
ரவி சாஸ்திரி இப்படி சொல்லியிருந்த நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் ஐசிசியின் இடைக்கால தலைமை செயல் அதிகாரி Geoff Allardice.
“மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சாம்பியனை தீர்மானிப்பது ஒரு சிறந்த வழியாகும். ஆனால் சர்வதேச கிரிக்கெட் கால அட்டவணையில் ஒரு மாத காலத்தை முழுமையாக பெறுவது சாத்தியமற்றது. இறுதி போட்டியில் விளையாடும் இரு அணிகள் மட்டுமல்லாது அந்த தொடரில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளும் அந்த ஒரு மாத காலம் சர்வதேச கிரிக்கெட் அட்டவணையை திட்டமிட முடியாது. அதனால்தான் ஒரே ஒரு இறுதி போட்டி என முடிவு செய்யப்பட்டது. இது ஒரு புது அனுபவத்தை கொடுக்கலாம். உலகின் மிகச் சிறந்த டெஸ்ட் அணி எது என்பதை தீர்மானிக்க உள்ளது இந்த இறுதி போட்டி” என அவர் தெரிவித்துள்ளார்.
அதே போல இந்த இறுதி போட்டி 5 நாட்கள் விளையாடும் டெஸ்ட் போட்டியாக மட்டுமே முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ஒருநாளை ரிசர்வ் டேவாக கொண்டுள்ளதற்கு ஒரு காரணம் உள்ளது. இந்த இடைபட்ட 5 நாட்களில் ஏதேனும் ஆட்டத்தில் நேரம் வீணாகி இருந்தால் அதனை ஈடுகட்டவே ரிசர்வ் டே என ஐசிசி தெரிவித்துள்ளது.
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் புள்ளி கணக்குகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் வரும் 2021 – 23 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனும் ‘percentage of points won’ என்ற ரேங்கிங் முறையில் தொடரும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
– எல்லுச்சாமி கார்த்திக்