எங்கள் வீட்டில் 90 வயது மாமனார் இருக்கிறார். அவருக்கு நிறைய பிரச்னைகள் இருப்பதால் தடுப்பூசி போடுவதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்நிலையில் வேலைக்குச் சென்று வரும் வீட்டிலுள்ள மற்றவர்களால் அவருக்குத் தொற்று பாதிக்க வாய்ப்புகள் உள்ளனவா? மாமனாரின் பாதுகாப்பை எப்படி உறுதிசெய்வது?
– தேன்மொழி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.
“நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் மாமனார் தவிர்த்த மற்ற எல்லோருக்கும் தடுப்பூசி போடுவதை வலியுறுத்துவதைத் தான். அதாவது, தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத நிலையில் உள்ள வயதானவர்கள், குழந்தைகள், இம்யூனோ சப்ரசென்ட் நோயாளிகள் போன்ற அனைவருக்கும் இந்த முறையில் ஓரளவு பாதுகாப்பு அளிக்கலாம். வீட்டில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் நோய்த்தடுப்பாற்றலே, தடுப்பூசி போடாத அந்த நபரை, தொற்று பாதிப்பிலிருந்து காப்பாற்றிவிடும். இதை `இம்யூனிட்டி ரிங்’ அதாவது, பாதுகாப்பு வளையம் என்று சொல்கிறார்கள்.
எந்தவொரு தடுப்பூசியும் 100 சதவிகிதம் பலன் தராது. 80 முதல் 90 சதவிகிதம்தான் வேலை செய்யும். அதாவது 10 பேருக்குத் தடுப்பூசி போடும்போது ஒன்றிரண்டு பேருக்கு நோய் எதிர்ப்பாற்றால் வராமலிருக்கலாம். ஆனால், மீதமுள்ள 8 – 9 நபர்களால், நோய் எதிர்ப்பாற்றல் வராத நபரும் பாதுகாக்கப்படுவார்.
Also Read: Covid Questions: கொரோனா குணமான பின்னர் அவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவுமா?
எனவே, உங்கள் வீட்டில் தடுப்பூசி போடத் தகுதியான அனைவரும் தாமதிக்காமல் அதைப் போட்டுக்கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மாமனாருக்குப் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக் கொடுங்கள்.”
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions’ பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!