அப்போது அவருக்கு 27 வயது இருக்கும். ‘சாவைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்துபோனால் எனது கைத்துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும், அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும்’ என்று முழங்கினார் “சே-குவேரா”. மருத்துவம் படித்த இவர் டாக்டர் தொழிலைச் செய்யவே முதலில் விரும்பினார். ஆனால், காலம் அப்போது அவருக்கு வேறு ஒரு பாடத்தைக் கற்றுத் தந்தது.

ஸ்பானியர்கள் கியூபாவில் குடியேறிய காலம். காலங்காலமாக பூர்வ குடிகளாக செவ்விந்தியர்கள் வாழ்ந்து வந்த மண்ணில் காலடி எடுத்துவைத்தார் கொலம்பஸ். புதிதாக ஒரு நாட்டையே கண்டு பிடித்து விட்டோம் என்ற உற்சாகம் அவருக்குள் எழுந்தது. ஆயிரக்கணக்கான ஸ்பானிய வீரர்கள் பூர்வ குடிகளைக் கூட்டம் கூட்டமாக வெட்டி வீழ்த்தினர். எஞ்சியவர்களை அடிமையாக்கினர்.

image

உலகின் சக்கரைக் கிண்ணம் என்று அழைக்கப்படும் கியூபாவைக் கைப்பற்றிய ஸ்பானிய அரசு, அட்டை போல் கியூபாவின் வளத்தையெல்லாம் உறிஞ்சத் தொடங்கியது. இவர்களின் அட்டூழியங்களைத் தடுக்கும் விதமாக, 1890ல் ‘ஹொஸே மார்த்தி’ எனும் கவிஞனின் தலைமையில் பூர்வ குடிகள் அணி திரண்டனர். ஆனால் புரட்சி துவங்கிய வேகத்திலேயே, ஹொஸேவைச் சுட்டுக்கொன்றது ஸ்பானிய அரசு. ஸ்பானிய அரசுக்கு எதிராகப் புரட்சி செய்பவர்களுக்கு, அமெரிக்கா உதவிசெய்தது. இதனால், ஸ்பானிஷ் அரசு அமெரிக்காவிடம் யுத்தத்தைத் தொடங்கியது.

இந்த போராட்டத்தில், 1902-ம் ஆண்டு ஸ்பானிய அரசு தோற்றது. பின்னர் வந்த அமெரிக்காவும், கியூபாவின் பொருளாதாரத்தை உறிஞ்சத் தொடங்கியது. கடைசியாக கியூபாவை ஆண்ட ஃபெலன்சியா பாடிஸ்டா ஆட்சியில், இது உச்சக்கட்டமாக நிகழ்ந்தது. இதனால், மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுந்தனர். இந்த போராட்டத்தில், ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையேற்றார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதால், புரட்சியாளர்களின் கனவுகளுக்குப் பேரிடியாக இருந்தது. இதையடுத்து, பாடிஸ்டா அரசின் மீதான எதிர்ப்பு காட்டுத்தீயாகப் பரவியது. இந்த எதிர்ப்பினால், மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து புரட்சி நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம்கொண்ட அரசு, ஒரு மன்னிப்பின் பேரில் காஸ்ட்ரோவை விடுதலை செய்தது.

image

1928-ம் ஆண்டு ஜூன் மாதம் 14 -ம் நாள் அர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில், ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டி ல செர்னா என்ற தம்பதியர்களுக்கு ஒரு மகன் பிறக்கின்றான். அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து ‘ஏர்னெஸ்டோ குவேரா டி ல செர்னா’ எனப் பெயர் சூட்டினர். பிற்காலத்தில், கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன் இவன்.

இவரின் குடும்பத்துக்குச் சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணை இருந்தது. இவரின் 2 வயதிலிருந்தே நுரையீரலை நிமோனியா நோய் தாக்கி, அதனுடன் ஆஸ்துமாவும் அவருக்கு இருந்தது. இருந்தும் இவர் ஒரு சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். இவர் இந்த விளையாட்டில் சிறந்து விளங்கியதால் இவரை அனைவரும் “பூசெர்” என்று பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அதேபோல், இவர் அதிகமாகக் குளிக்க மாட்டார். எனவே இவருக்கு “பன்றி” என்னும் பொருளுடைய “சாங்கோ” என்ற பட்டப்பெயரும் உண்டு.

image

இவரின் தந்தையிடமிருந்து, சதுரங்கம் விளையாட்டை கற்றுக் கொண்ட இவர், கவிதை எழுதுவதில் ஆர்வமுடையவர். வளரிளம் பருவத்தில் பாப்லோ நெருடாவின் வார்த்தைகள், “சே” வின் இதயத்தை மிகவும் பரவசப்படுத்தின. இதனால் இவர் அதிக நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். இவரின் வீட்டில் 3,000 நூல்களுக்கு மேல் இருக்கும். இவற்றுள், கார்ல் மார்க்ஸ்,போல்க்னர், வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. இவை தவிர ஜவஹர்லால் நேரு , லெனின் போன்றவர்களது நூல்களையும், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார். வாசிப்பதோடு மட்டும் நின்று விடாமல் எழுத்தாளராக வேண்டும் என்ற கனவும் அவருக்கு இருந்தது. எனவே அவர் தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் தொகுப்பாக்கினார். மருத்துவம் படிப்பதற்காக 1948-ம் ஆண்டு, புவனஸ் அயர்ஸ் என்ற பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் சே குவேரா. ஆனால், 1951ம் ஆண்டில் படிப்பிலிருந்து ஓராண்டு விடுமுறை எடுத்துக்கொண்டு, அவரது நண்பர் ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து, தென் அமெரிக்கா முழுவதும் ’மோட்டார் ஈருருளி’ பயணம் செய்தார்.

image

அவரின் சுற்றுப் பயணக்காலத்தில், தென் அமெரிக்கா முழுவதும், தொழுநோய் அதிகமாகப் பரவியிருந்தது. எனவே அது குறித்து ஆய்வு செய்து, ஒரு மருத்துவராக தன்னால் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்று நினைத்து, தொழுநோயாளிகளின் தங்குமிடங்களைத் தேடிச்சென்று அவர்களுடன் இருந்தார். அவரின் பயணங்களின் போது எடுத்த குறிப்புகளைக் கொண்டு, “மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்” என்னும் புத்தகம் எழுதினார். இந்த புத்தகம் உலக அளவில் மிகவும் பிரபலமானது. அதேபோல், இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து 2004-ல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படமும் பல்வேறு விருதுகளைப் பெற்றது. அர்ஜென்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ படிப்பில் டிப்ளோமாவில் பட்டம் பெற்றார். இதையடுத்து, மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கிய சே-குவேரா, இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ்,எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.

அதே ஆண்டு டிசம்பரில் சே-குவேரா குவாத்தமாலாவுக்குச் சென்றார். அங்கு, ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. பின்னர் இவரையே சே திருமணம் செய்துகொண்டார். இந்த பெண் இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு என்னும் இயக்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். அரசியலிலும் அதிக தொடர்புகள் இருந்ததால், ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சே-குவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களிடமும் இவர் தொடர்பு வைத்துக்கொண்டார். அவர்கள் அனைவரும் இவரை ‘சே’ என்று அழைப்பர். ‘சே’ என்பதற்கு நண்பர் அல்லது தோழர் என்னும் பொருளைக் கொண்ட அர்ஜென்டீனச் சொல்லாகும். அங்கிருந்த அவர், கம்யூனிஸ்ட்களுடன் தன்னை இணைத்துக்கொண்டார். 1954-ம் ஆண்டு கியூபா மக்களைச் சந்தித்தார். கம்யூனிஸ்ட்களிடம் நெருங்கிப் பழகிய “சே”, மார்க்சிய லெனினியப் பாதை தான் தன்னுடைய பாதை என்பதை உணர்ந்தார்.

image

இதே நேரத்தில், கியூபாவில் போராளியாக இருந்த, நிக்கோ லோபஸ் என்பவரை சந்தித்தார் சே. சித்தாந்தங்களில் தேர்ச்சி பெற்றிருந்த சே கியூபா புரட்சியில் பங்கெடுத்தால், போராட்டத்துக்கு ஒரு புது வடிவம் கிடைக்கும் என்று லோபஸ் நம்பினார். இது குறித்து பிடல் காஸ்ட்ரோவின் சகோதரர் ரால் காஸ்ட்ரோவுடன் கலந்து பேசினார். அப்போது ‘சே’வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. காஸ்ட்ரோவுக்கு போர்க்குணமும் போராட வேண்டிய அவசியமும் இருந்தது. ‘சே’ வுக்கு தத்துவமாக கம்யூனிஸம் உறைந்திருந்தது. ஆனால் போராடக் களம் இல்லை. இருவரும் இணைந்து, ஏறக்குறைய ஒன்றரை வருடக் கடுமையான ஆயுதப் பயிற்சிக்குப் பிறகு 1956, நவம்பர் 26-ம் தேதி இரவு மெக்ஸிகோ கடற்கரையில், 82 போராளிகள் விடுதலையின் பாடலை முழங்கியபடி, கிரான்மா எனும் படகில் கியூபாவை நோக்கிப் பயணித்தனர். இந்தப் புரட்சியில், 1957-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி, தளபதி லா பிளாட்டோ கொல்லப்பட்டார். இது புரட்சியாளர்களின் முதல் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. இவர்களின் இந்த வெற்றி கியூபா முழுவதும் எதிரொலித்தது.

image

அப்போது சே, “சாவைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை எடுத்துக் கொள்வார்கள். தோட்டாக்கள் தொடர்ந்து சீறும்” போன்ற வசனங்களை அவர் கியூபா முழுவதும் பரப்பினார். 1958-ம் வருடம் ஸாண்டா கிளாராவைக் கைப்பற்றினார். அதே ஆண்டு, ஆகஸ்ட்டில், புரட்சிப் படை தலைநகர் ஹவானாவை கைப்பற்றினர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, உலகின் அனைத்து நாடுகளையும் வியப்பில் ஆழ்த்தியது. 1959, பிப்ரவரி 16-ல் கியூபாவின் பிரதமராக காஸ்ட்ரோ பதவியேற்றார். அப்போது ‘சே’ தேசிய வங்கியின் அதிபராகவும், விவசாயத் துறையில் தேசியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அப்போது, தேசிய வங்கியின் தலைவராக கியூபா ரூபாய் நோட்டுகளில் ‘சே’ எனக் கையெழுத்திடும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றார். 1961-ம் ஆண்டு தேசிய வங்கியின் பதவியைத் துறந்து, தொழிற்துறை அமைச்சராகப் பதவியேற்றார். இருந்தாலும் ‘சே’ தன்னை ஒரு சாதாரணக் குடிமகனாகவே அடையாளம் காட்டிக் கொண்டார். விவசாயக் கூலிகளுடன் சேர்ந்து பணியாற்றினார். அமெரிக்காவின் சி.பி.என்.தொலைக்காட்சி, ஒரு நேர்காணலுக்காக சேகுவேராவை நியூயார்க்குக்கு அழைத்தது. அந்த நேர்காணலில், ‘அமெரிக்கா ஒரு கழுதைப் புலி. அதன் ஏகாதிபத்தியத்தை நான் வேரறுப்பேன்’ என அமெரிக்காவிலேயே துணிச்சலாகப் பேட்டி கொடுத்தார் ‘சே’.

image

1966-ல் காங்கோவை விட்டு வெளியேறிய அவர், பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். போலி பாஸ்போர்ட்டுடன் வந்ததால், பொலிவிய ராணுவம் அவரை சுற்றி வளைத்துச் சரமாரியாகச் சுடத் தொடங்குகிறது. அவர் காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலிவிய ராணுவத்திடம். நான் இறப்பதைக் காட்டிலும், உயிருடன் பிடிப்பது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்’ என்று கூறி, பழைய பள்ளிக்கூடம் ஒன்றில்’ கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறையிலிருந்தார். பள்ளிக்கூடச் சூழலைப் பார்த்துவிட்டு, அங்கிருந்த ஆசிரியர் ஜூலியஸ் கோர்ட்டஸ் என்னும் 19 வயது பெண்ணிடம், “இதுபோன்றச் சூழலில் எப்படிக் குழந்தைகள் இங்குப் படிப்பார்கள்? ஒருவேளை நான் பிழைத்தால்,உங்களுக்கு நல்ல பள்ளிக்கூடம் கட்டித் தருவேன்” என்றார். ‘சே பிடிபட்டார்’ என்ற தகவல் சி.ஐ.ஏ-வுக்கு தெரிவிக்கப்படுகிறது. அதே சமயம், ‘சே’ உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாகப் பொய்யான தகவலும் பொலிவிய ராணுவத்தால் பரப்பப்பட்டது. ‘சே’ வை உயிருடன் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால், அது புரட்சியை ஏற்படுத்தும் எனவே அவரைக் கொன்று விடுங்கள் என சி.ஐ.ஏ-விடம் இருந்து தகவல் வருகிறது. எனவே அவரை சுட்டுக்கொல்ல முடிவு எடுத்தாலும், அதனை யார் செய்வது என்ற குழப்பம் அனைவருக்கும் வந்தது. இதையடுத்து, ‘மரியோ ஜேமி’ என்னும் பொலிவிய ராணுவ சர்ஜன் அப்பொறுப்பினை ஏற்றுக்கொள்கிறார். 1967 அக்டோபர் 9-ம் தேதி சரியாக நண்பகல் 1.10 மணியளவில், கைகள் கட்டப்பட்ட நிலையில், தனிமையான இடத்துக்கு மரியோ, சே-குவேரா-வை அழைத்துச் செல்கிறார்.

image

“முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்!” என்பார் ‘சே’. ஆனால், மரியோ அவரை ஒரு கோழையைப் போலக் கொல்லத் தயாராகிறார். தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு ‘சே’ கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார் மரியோ. இதனால், இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன, உலகம் புகழும் மனிதன், கோபத்துடன் சொன்ன கடைசி வார்த்தை இதுதான், “கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல, ஒரு சாதாரண மனிதனைத்தான்!” என்றார். அவரை நோக்கி வந்த ஒன்பது தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி, தேசம் என எல்லைகள் கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன், மண்ணில் சாய்ந்து இந்த உலகை விட்டு விடை பெறுகிறான். அப்போது அவருக்கு 39 வயது.

image

‘சே’ இறந்துவிட்டார் என்ற தகவல், உலகை உலுக்கியது. கியூபா மற்றும் ஹவானா-வில், ‘சே’ வின் அஞ்சலிக்காக காஸ்ட்ரோவின் தலைமையில் அக்டோபர் 18-ம் தேதி வரலாறு காணாத கூட்டம் கூடியது. அவர்கள் முன் உரையாற்றிய காஸ்ட்ரோ. ‘வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்றுவிட்ட ‘சே’ நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூபா மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார். சே-வுக்கு மரணதண்டனை நிறைவேற்றிய ‘லா ஹிகுஏரா’ என்ற இடத்தில் மக்கள் எழுப்பிய சே-வின் சிலையை ராணுவத்தினர் உடைப்பதும் மக்கள் மீண்டும் சிலையை நிறுவுவதுமாகத் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. அர்ஜென்டைனாவின் அதிபர் ஃபிடெல் காஸ்ட்ரோவை கடுமையாக எதிர்த்தாலும் சே-குவேராவின் உருவம் பதித்த தபால்தலையை வெளியிட்டார்.

image

காஸ்ட்ரோவுக்கு கியூபா தன் சொந்த நாடு. போராடிய வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைப்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று தான். இதனால்தான் ‘சே’ மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார். “விளைவுகளை ஏற்படுத்தாத எந்த ஒரு சொல்லும் வீணானது” என்பதே அவர் அடிக்கடி சொல்லும் வசனம். ஆம்… அவர் அழிக்கப்படவில்லை. ‘சே’ எனும் சொல்லாக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

– பெ.மதலை ஆரோன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.