தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம் என முதமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாதிப்பு குறைவான மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள்: கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொற்று குறைந்த மாவட்டங்களில் பொதுமக்கள் நலன் கருதி இ-சேவை மையங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சாலையில் பாதுகாப்பு – பெண் காவலர்களுக்கு விலக்கு: முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் செல்லும் சாலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவைத் தொடர்ந்து காவல்துறை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சிவசங்கர் பாபா மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தற்போது சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம்: தடுப்பூசி செலுத்திக்கொள்ள மதுரை, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம் பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகத்தில் 1 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது. 45 வயதுக்கு மேற்பட்டோரில் 7 விழுக்காடு நபர்களுக்கு தடுப்பூசியின் இரு டோஸ்களும் போடப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு 81,000-க்கு கீழ் குறைந்தது: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 81 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பினர்.

டெல்லியில் அரசு பேருந்துகளுக்கு அனுமதி: டெல்லியில் அரசு பேருந்துகள் 50 சதவிகித பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், மால்கள், மார்கெட்டுகள் உள்ளிட்டவை அனைத்து நாள்களிலும் செயல்படலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக்கை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: தமிழகத்தில் நாளைமுதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கடையில் ஒரு நேரத்தில் 5 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுபானக் கடை திறப்புக்கு எதிராக பாஜக போராட்டம்: டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுவதற்கு பாரதிய ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஷேல் கேஸ் ஏலம் – விவசாயிகள் போராட்டம்: வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நெடுவாசல் அருகே ஷேல் கேஸ் எடுக்க ஏலம் விடப்பட்டது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ.100- ஐ நெருங்கும் பெட்ரோல் விலை: தமிழகத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியது. கொடைக்கானலில் ஒரு லிட்டர் 99 ரூபய் 95 காசுக்கு விற்பனையாகிறது.

ராஜஸ்தானில் டீசல் விலை சதமடித்தது: நாட்டிலேயே முதல்முறையாக டீசல் விலை ஒரு லிட்டருக்கு 100 ரூபாயைக் கடந்தது. பெட்ரோலைத் தொடர்ந்து ராஜஸ்தானில் டீசல் விலையும் சதமடித்தது.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – இன்று பைனல்: செர்பிய நட்சத்திரம் ஜோகோவிச்சுடன் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் இன்று மோதுகின்றனர். இதனால் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடங்குகிறது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி: 10 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று இரவு தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் பிரேசில் – வெனிசுலா அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.