இந்தியாவில் அதிகாரபூர்வ கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை விட ஐந்து முதல் ஏழு மடங்கு வரை அதிக இறப்புகள் ஏற்பட்டிருப்பதாக வெளியான செய்தியை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் விளக்கம்:

‘அதிகாரபூர்வ கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை விட ஐந்து முதல் ஏழு மடங்கு வரை அதிக இறப்புகள் இந்தியாவில் ஏற்பட்டிருப்பதாக பிரபல சர்வதேச பத்திரிகையில் வெளிவந்துள்ள கட்டுரை, யூகத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இன்றி தவறான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை அது.

image

உயிரிழப்புகள் குறித்து அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஆய்வுகள் முறையாக நடத்தப்பட்டவை அல்ல. விர்ஜினியா காமல்வெல்த் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்டோபர் லாஃப்பெர் செய்ததாக கூறப்படும் அந்த ஆய்வு குறித்த தகவல்கள் அறிவியல் தரவுதளங்களான பப்மெட் மற்றும் ரிசர்ச் கேட் உள்ளிட்டவற்றில் இல்லை. மேலும், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட முறை குறித்து பத்திரிகையில் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

காப்பீட்டு கோரிக்கைகளின் அடிப்படையில் தெலங்கானாவில் செய்யப்பட்டதாக கூறப்படும் ஆய்வு குறித்தும் சரியான தகவல்கள் இல்லை.

தினசரி இறப்பு எண்ணிக்கையை மாவட்ட அளவில் மத்திய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சரியான எண்ணிக்கை பதிவாக வேண்டும் என்று அது தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறைவான உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக தொடர்ந்து தகவல் தெரிவிக்கும் மாநிலங்களின் தரவுகளை சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டன.

கொரோனா இறப்புகள் குறித்த தகவல்களை பதிவு செய்வது குறித்து ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் பின்பற்ற வேண்டும். நன்கு நிறுவப்பட்ட, சரியான மற்றும் வலுவான முறையில் தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன’ என்று அந்த மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.