கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு இரண்டு நாள்களுக்கு லேசான காய்ச்சல் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த முதியவர் ஒருவர், தனக்குப் புதுவிதமான ஒரு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்.
நாசிக்கை சேர்ந்தவர் அர்விந்த் சோனார் (67). இவர் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். முதல் தடுப்பூசி எடுத்துக்கொண்டபோது எந்தவித பிரச்னையும் அவருக்கு ஏற்படவில்லை. ஆனால் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு தனது உடலில் காந்த சக்தி அதிகரித்திருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
அவர் கையில் ஸ்பூன், நாணயங்களை வைத்தால் அப்படியே ஒட்டிக்கொள்கிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரம்பத்தில் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வியர்வையில் ஒட்டிக்கொள்கிறது என்றே நினைத்தார்கள். ஆனால் தொடர்ந்து இதுபோல நடக்க, இதனை அர்விந்த் ஒரு வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இன்னொரு பக்கம், அர்விந்த்துக்கு உடம்பில் என்ன பிரச்னையோ என்று அவர் குடும்பத்தில் குழப்பம் அடைந்துள்ளனர். அவரை டாக்டரிடம் அழைத்துச் சென்று சோதித்தனர். டாக்டர்கள் சோதித்துப் பார்த்துவிட்டு, அவர்களாலும் எதையும் சொல்ல முடியவில்லை. நாசிக் மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்களும் அர்விந்த் வீட்டிற்கே வந்து சோதனை செய்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இது குறித்து டாக்டர் அசோக் தோரட் கூறுகையில், “அர்விந்த் சோனார் உடம்பில் நாணயங்கள், ஸ்பூன்கள் ஒட்டிக்கொள்ளும் வீடியோவை பார்த்தேன். தடுப்பூசி போட்டதன் விளைவா இது என்பதை ஆய்வுக்கு உட்படுத்தியே சொல்ல முடியும். முழுமையான ஆய்வுக்குப் பிறகே இது குறித்து தெளிவான முடிவுக்கு வர முடியும். இப்போதைக்கு அறிக்கையை அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். மேற்கொண்டு ஏதாவது ஆய்வு தேவையெனில் நடத்தப்படும்” என்றார்.
Also Read: `கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பது ஆதாரமற்ற தகவல்’ – விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்
Also Read: டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க இனி தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமா? – உண்மை என்ன?
அர்விந்த் மகன் ஜெயந்த் இது குறித்து கூறுகையில், “டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்குக் கொரோனா இரண்டாவது தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு உடம்பில் காந்தசக்தி உருவான வீடியோவை பார்த்திருக்கிறேன். என் பெற்றோரிடமும், இதேபோன்று செய்து பார்க்கும்படி கேட்டுக்கொண்டேன். அவர்களும் கையில் நாணயங்களை வைத்தபோது, என் அப்பாவின் கையில் அப்படியே ஒட்டிக்கொண்டது” என்று தெரிவித்தார். இப்போது அர்விந்த்தை ஒவ்வொருவராக வந்து அதிசயம் போல பார்த்துச் செல்கின்றனர்.