கொரோனா பெருந்தொற்றால், நாள் ஒன்றுக்கு தமிழ்நாட்டில் வெளியேற்றப்படும் மருத்துவக்கழிவுகள் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. மறுசுழற்சி நிலையங்களின் திறன் குறைவாக இருப்பதால், விதிகளை மீறி குப்பைக்கூடங்களிலும், நீர்நிலைகளிலும் மருத்துவக்கழிவுகளை கொட்டும் நிலை உருவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மறுசுழற்சி செய்யும் திறன் – 55 டன் 2019 ல் தமிழ்நாட்டில் மருத்துவ கழிவுகள் வெளியேற்றம், நாள் ஒன்றுக்கு 58.2 டன் என்ற அளவில் இருந்தது. 2020 மார்ச்சில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதில் இருந்து முகக்கவசம், பிபி, உடைகள், கையுறைகளின் பயன்பாடும் அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் படுக்கையில் இருந்து ஒரு நாளைக்கு 2 முதல் 3 கிலோ மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படுவதாக அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு வருடமாக, தமிழ்நாட்டில் 50,000-க்கும் மேற்பட்ட மருத்துவ படுக்கைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அதிலும் கடந்த மார்ச் முதல் 2 லட்சம் மருத்துவ படுக்கைகளில் பேர் சிகிச்சை பெற்றனர். ஒரு படுக்கையில் இருந்து ஒரு கிலோ மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்பட்டதாக கருதினால், கடந்த ஓராண்டில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 டன்னுக்கு மேல் வருகிறது. அதிலும், மார்ச் மாதம் முதல் நாள்தோறும் வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகளின் அளவு 200 டன்னுக்கு மேல் வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 55 டன் மருத்துவ கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திறனே உள்ளது.
வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களின் மருத்துவக்கழிவுகள் மாநகராட்சி குப்பை தொட்டியில் போடப்படுவதால் தூய்மைப்பணியாளர்கள் அதிக அளவில் பாதிப்படைகிறார்கள்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 12 மறுசுழற்சி நிலையங்களும் தனியார் வசமே உள்ளது. திண்டுக்கல் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 8 தென் மாவட்டங்களுக்கு மொத்தமே 2 மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களே உள்ளன. எனவே மருத்துவக் கழிவு மறுசுழற்சி நிலையத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.