`கொரோனா காலத்தில் அதிக செலவில்லாமல் திருமணம் பண்ணலாம்’ என்று நினைத்து, 18 வயது பூர்த்தியாகாத தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற அந்தச் சிறுமியின் பெற்றோர் மற்றும் மாப்பிள்ளை, அவரின் தாய் என நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Also Read: `வா கோயிலுக்குப் போயிட்டு வரலாம்!’ – 17 வயது மகளுக்கு தாயே அரங்கேற்றிய கொடூரம்
கரூர் அருகே உள்ள ஆண்டாங்கோயில் மேற்கு கிராமம், கோவிந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிவேல். இவர், தனது 16 வயதுடைய மைனர் மகளுக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி வடக்குப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சந்தோஷ்க்கு திருமணம் செய்துகொடுக்க முடிவு செய்துள்ளார்.
`கொரோனா காலம் என்பதால், அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை’ என்று நினைத்து திருமண வயது நிரம்பாத தனது மகளுக்குத் திருமணம் செய்ய அவர் முடிவெடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கரூரில் உள்ள வெண்ணைமலை முருகன் கோயில் முன்பு அவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும், அன்று இரவே இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், இதுசம்பந்தமாக சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமிக்கு புகார் சென்றுள்ளது. அதன்படி, தனலட்சுமி தலைமையிலான குழுவினர் ஜூன் 10-ம் தேதி விசாரணை மேற்கொண்டதில், அப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை என்பதை உறுதிபடுத்தியதுடன், கரூர் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனடிப்படையில், மணமகன் சந்தோஷ் (22), மைனர் பெண்ணின் தந்தை மணிவேல், தாய் ராஜேஸ்வரி மற்றும் சந்தோஷின் தாய் அமுதவள்ளி ஆகிய 4 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, கரூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும், அந்தச் சிறுமியை மீட்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். கொரோனா ஊரடங்கில் அவசரம் அவசரமாக திருமண வயது பூர்த்தியாகாத சிறுமிக்கு இரு குடும்பத்தினரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.