கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில், சுகாதார சேவை இயக்குநரகம் (Directorate General of Health Services) குழந்தைகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. அதில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியவேண்டியதில்லை என்று குறிப்பிடப்பட்டு, அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளது.
முகக்கவசம் அணியத் தெரியாத காரணத்தால் பாதுகாப்பில் சிக்கல்கள் ஏற்பட்டுவிடும் என்பதால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசங்கள் அணிய வேண்டியதில்லை என்று சுகாதார சேவை இயக்குநரகம் கூறியுள்ளது.
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளே முகக்கவசம் அணியவேண்டியதில்லை என இதற்கு முன் கூறப்பட்டடிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆறு முதல் பதினொரு வயது வரையிலான குழந்தைகள், பெற்றோர்களின் உதவியோடு பாதுகாப்பான முறையில் முகக்கவசங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. அதே போல பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெரியவர்களைப் போலவே முகக்கவங்களை எப்போதும் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றுக்கு மருந்து பரிந்துரைக்கப்படவில்லை. ஸ்டீராய்டு மருந்துகள் பிற்காலத்தில் கடுமையான பிரச்னைகளை விளைவிக்கும் என்பதால் அறிகுறிகளற்ற மற்றும் லேசான அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு இவற்றைப் பயன்படுத்தக்கூடாது எனவும் பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட்-19 சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் வழங்கக்கூடாது எனவும் குழந்தைகளுக்கு நுரையீரலில் ஏற்படும் கொரோனா தொற்றின் தாக்கத்தைக் கண்காணிக்க high resolution சி.டி. இமேஜிங் செய்யவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
லேசான அறிகுறிகளான காய்ச்சல், தொண்டை எரிச்சல் ஏற்படும் பட்சத்தில் குழந்தைகளுக்கு நான்கிலிருந்து ஆறு மணிநேரத்துக்கு ஒருமுறை பாராசிட்டமால் மாத்திரை கொடுக்கலாம். கடுமையான தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவரின் மேற்பார்வையிலிருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் மருத்துவரின் வழிகாட்டுதல்களின்படி ஸ்டீராய்டு மருந்தை எடுத்துக்கொள்ளச் செய்யவேண்டும். ஆன்டி மைக்ரோபியல் மருந்துகள் கோவிட் -19 பெருந்தொற்றைத் தடுப்பதிலோ குணப்படுத்துவதிலோ எந்தவித பங்கும் ஆற்றவில்லை என்பது கண்டறியப்பட்டது. அதனால் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுகள் அல்லாமல் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க ஆன்டி மைக்ரோபியல் மருந்துகளைப் பயன்படுத்துவதையும் தடைசெய்துள்ளது சுகாதார சேவை இயக்குநரகம் .