நாளை மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில், காவிரி நீரின் பாசனப்பரப்பு, குறுவை இலக்கு, உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
மேட்டூரில் நாளை திறக்கப்படும் தண்ணீர் 16ஆம் தேதி கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் என மூன்று ஆறுகள், 36 கிளை ஆறுகள், 26 ஆயிரம் வாய்க்கால்கள் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், மாவட்டங்களுக்குச் செல்லும். இந்த தண்ணீர் சுமார் 12 லட்சம் ஏக்கர் அளவிற்கு முப்போக சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இந்த ஆண்டு டெல்டா மாவட்டத்தில் மூன்றரை லட்சம் ஏக்கர் அளவிற்கு குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 1.42 லட்சம் ஏக்கர் நடவு நடப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் 647 பணிகள் அதாவது 4 ஆயிரத்து 61 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர் வாரும் பணிகளுக்காக 65 கோடியே 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன. 16 ஆம்தேதி தண்ணீர் வருவதற்குள் பணிகளை முடிக்கும் வகையில் 14 ஆம்தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.