பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி மையம் (Women Child Help desk) தமிழ்நாடு காவல்துறையால் தொடங்கப்பட்டது. அதன்படி பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார், வழக்குகளுக்கு 100, 1098 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களை கூறினால் போதும்.
Also Read: சென்னை: சிறார் வன்கொடுமை… 14 வயது சிறுமியைத் தாயாக்கிய இளைஞர்; போக்சோவில் கைதுசெய்த போலீஸ்!
உடனடியாக பெண் போலீஸார் உங்கள் வீடு தேடி வந்து விசாரித்து உதவி செய்வார்கள். இதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள பெண் போலீஸாருக்கு இருசக்கர வாகனம் மற்றும் மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 ஸ்கூட்டர்கள் போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவை பெண் போலீஸாருக்கு இருசக்கர வாகனம் மற்றும் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி பி.ஆர்.எஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், கோவை போலீஸ் எஸ்.பி செல்வநாகரத்தினம் கலந்து கொண்டு பெண் போலீஸாருக்கு இருசக்கர வாகனம் மற்றும் மடிக்கணினி வழங்கினார்.
அதன்பிறகு எஸ்.பி செல்வநாகரத்தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அனைத்து மகளிர் காவல்நிலையங்களில், மற்றும் பிற காவல் நிலையங்களில் பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட புகார்களுக்கான பிரத்யேக உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
அதுதொடர்பான புகார்களை விசாரிக்க கோவையில் 18 காவல்நிலையங்களில் உள்ள பெண் போலீஸாருக்கு, காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனம், மடிக்கணினி வழங்கியுள்ளோம். இனி, பெண்கள், குழந்தைகளை காவல்நிலையம் வரவைக்காமல், அவர்களின் இடங்களுக்கு நேரடியாகச் சென்று புகார், வாக்குமூலங்களை பெற்று தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
நேரடியாக சென்று விசாரிப்பதால் விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். சில நல்ல உள்ளங்களின் உதவியோடு அவர்களுக்கு ஹெல்மெட்டும் வழங்கியுள்ளோம்.” என்றார்.