உலகம் முழுக்க கடந்த ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் காலமாற்றத்திற்கு ஏற்றாற்போல உருமாற்றமடைந்து வருகிறது. அப்படி உருமாறி இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸை `டெல்டா’ வேரியன்ட்டாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
இந்த வகை கொரோனா வைரஸ் தீவிர வயிற்றுப்போக்கு, காதுகேளாமை, அழுகிய புண்கள் என இதற்கு முன்பு இருந்த அறிகுறிகளாக அல்லாமல் புதிய அறிகுறிகளைக் காட்டிவருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூரிடம் பேசினோம். இன்னும் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கவேண்டி வலியுறுத்துகிறார் அவர்.
“இந்தியன் வேரியன்டான டெல்டா வேரியன்ட் ஆறே மாதங்களில் கிட்டத்தட்ட 60 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. கொரோனா பரவலுக்கு முன்பு மியூகோர்மைகோசிஸ் என அழைக்கப்படும் பூஞ்சை நோய்த் தொற்றால் மிகக் குறைவானவர்களே பாதிக்கப்பட்டனர். ஆனால், கொரோனா நோய்த் தொற்று இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியதும், பூஞ்சைத்தொற்று அதிகரித்து கிட்டத்தட்ட 8,800 பேரை பாதித்திருக்கிறது.
கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிகமானோர் தீவிர வயிற்றுப்போக்கால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமன்றி காதுகேளாமை, அழுகிய புண்கள் போன்றவற்றால் அதிகமானோர் பாதிக்கப்படுவதால் கொரோனா அறிகுறிகளைக் கண்டறிவதில் சிக்கல்களும் எழுந்துள்ளன. டெல்டா வேரியன்ட்டான இந்த வகை கொரோனா வைரஸ் புதுப்புது அறிகுறிகளை வெளிப்படுத்தி மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்திவருகிறது. மேற்கொண்டும், இந்த கொரோனா வைரஸ்கள் உருமாறும் என்பதால் அவற்றை நினைவில் வைத்தே தடுப்பூசிகள் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்” என்கிறார் தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்.