வேலூர் மாவட்டத்தில், கொரோனா பெருந்தொற்றால் தாய், தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்கு ஆளான 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், தொற்றால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவும் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு ஏழு அலுவலர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்களின் செயலாளராக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரும், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு கூடுதல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நல அலுவலர், குழந்தைகள் நலக் குழுத் தலைவர் மற்றும் காட்பாடி ஹோப் ஹவுஸ் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகி ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழு மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு சாராத 9 குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள 131 ஆதரவற்ற குழந்தைகள், அங்குள்ள பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா மருத்துவப் பரிசோதனை செய்ய முடிவு செய்து, நேற்று 53 குழந்தைகளுக்குப் பரிசோதனை நடைபெற்றது.
மேலும், கொரோனா தொற்று காரணமாகப் பெற்றோரை இழந்து ஆதரவற்று நிற்கும் குழந்தைகள் தொடர்பாகவும், தொற்றால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளித்தல் தொடர்பாகவும் பொதுமக்கள் 1098 (சைல்டு லைன்), மாவட்ட குழந்தைகள் அலுவலகத்தை 0416-2222310 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரியப்படுத்தலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் (பொறுப்பு) பார்த்திபன் தெரிவித்துள்ளார்.