இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான விதிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி ஜூன் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. கோலி தலைமையிலான இந்திய அணி இப்போது மும்பையில் இருக்கும் ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தப் போட்டிக்கான விதிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் மிக முக்கியமாக இந்தப் போட்டி டிரா ஆனால் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டு இரு அணிகளும் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. விதிகளில் மேலும் சில “5 நாட்கள் நடக்கும் போட்டியின் ஒவ்வொரு நாள் ஆட்டத்திலும் தலா 90 ஓவர்கள் வீசப்படும். மழை காரணமாகக் குறைவான ஓவர்கள் வீசப்படும் பட்சத்தில் அந்த ஓவர்களை ரிசர்வ் டேயான 6ஆவது நாளில் வீசப்படும். ஒருவேளை ஒருநாள் ஆட்டம் பாதிக்கப்படும் பட்சத்தில் அதுவும் ரிசர்வ் டேவில் நடத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “டிஆர்எஸ் மேல் முறையீடு செல்வதற்கு முன்பு, நடுவர்களிடம் எதற்காக அவுட் அல்லது நாட்-அவுட் கொடுத்தீர்கள் எனக் கேட்டுவிட்டு, பிறகு டிஅர்எஸ் கேட்கும் முடிவை எடுக்கலாம். அதேபோல களத்தில் வீரர்களிடையே சர்ச்சை ஏற்படும்போது நடுவர்கள் மேட்ச் ரெப்ரீயிடம் உடனே முறையிட வேண்டும். தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது” என்று ஐசிசி விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.