இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகளை முன் கூட்டியே தொடங்கியிருந்தால் கொரோனாவால் ஏற்பட்ட ஏராளமான உயிரிழப்புகளை தவிர்த்திருக்க முடியும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் 2ஆவது அலை தொடங்கும் முன்பாக கடந்த டிசம்பரிலேயே தடுப்பூசி போட தொடங்கியிருந்தால் ஏராளமான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். மேலும் வெளிநாடுகளுக்கு அதிகளவில் தடுப்பூசி ஏற்றுமதி செய்ததும் உள்நாட்டில் அதன் பற்றாக்குறைக்கு காரணமாகிவிட்டதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி தர மறுப்பதாகவும் எனவே மத்திய அரசே அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கொரோனாவிற்கு எதிரான போரில் மாநில அரசுகள் தோற்றால் அது ஒட்டுமொத்த இந்தியாவின் தோல்வியாகத்தான் பார்க்கப்படும் என்றும் எனவே பிரதமர் மோடி பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார்.