இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 2,11,298 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,73,69,093 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,847. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,15,235 -ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,46,33,951-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 24,19,907 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 2,83,135 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 20,26,95,874 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

நீட்டிக்கப்படுமா முழு ஊரடங்கு..?

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருந்து வருகிறது. தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இந்த மாதம் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தியது ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு. எனினும் அதில் சில தளர்வுகள் இருந்தது. தொடர்ந்து மக்கள் ஊரடங்கினை சரியாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் முழு ஊரடங்கினை 31-ஆம் தேதி வரை நீட்டித்து தளர்வுகளற்ற முழு ஊரடங்காக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

கொரோனா வார் ரூம்-ல் ஸ்டாலின்

தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகத்தில் அமலில் இருந்துவரும் நிலையில் இந்த முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் மருத்துவம், வருவாய் துறை, பொதுத்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இன்று அல்லது நாளை ஊரடங்கு நீட்டிக்கப்படுவது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.