புவியியல் ரீதியாக தமிழகத்தை ஒட்டி அமைந்திருக்கிறது புதுச்சேரி மாநிலம். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களை உரசிக் கொண்டு அமைந்திருக்கும் புதுச்சேரியின் கிராமப்புறங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் கூட தமிழகப் பகுதிகளைக் கடக்க வேண்டும். கிராமப்புறங்களில் ஒரே தார் சாலை தமிழகம் புதுச்சேரியை பிரிக்கும். புதுச்சேரிக்குள் பல இடங்களில் தமிழகக் குடியிறுப்புகள் அமைந்திருக்கும்.
புதுச்சேரி – விழுப்புரம் எல்லை பகுதியில் அமைந்திருக்கிறது புதுவை மாநிலத்தைச் சேர்ந்த திருக்கனூர். இந்த ஊரின் சாலையை இரண்டாக பிரித்து தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சாலையின் ஒரு பக்கம் இருக்கும் திருக்கனூர் புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டிலும், மறுபக்கம் இருக்கும் சித்தலம்பட்டு தமிழக அரசின் கட்டுப்பாட்டிலும் வருகிறது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், புதுச்சேரியில் மதியம் 12 மணிக்கு மேல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது.
அதனால் புதுச்சேரி சாலையில் மதியம் 12 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்பதால், மக்கள் கூட்டமும், வாகன நெரிசலும் இருக்கிறது. ஆனால் அதற்கு நேர் மாறாக சாலையின் மறு பக்கம் இருக்கும் தமிழக சாலையில் கடைகள் அடைக்கப்பட்டு, எந்தவித வாகனப் போக்குவரத்துமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது.
Also Read: `ஊரடங்கு தளர்வை நீக்காவிட்டால் விபரீதமாகிவிடும்!’- புதுவை முதல்வருக்கு அலர்ட் கொடுத்த அமைச்சர்கள்
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும்போது அந்த சாலையில் இருக்கும் கடைக்காரர்கள் இந்த சாலைக்கு தாக்ச் சென்று வியாபாரம் செய்வதும், புதுச்சேரியில் முழு ஊரடங்கு இருக்கும்போது தமிழக சாலைக்கு தாவி வியாபாரம் செய்வதும் இந்த ஊரடங்கு காலத்தில் மட்டுமல்ல, அரசியல் கட்சிகள் மற்றும் வணிக அமைப்புகள் அவ்வப்போது நடத்தும் முழு அடைப்புப் போராட்டங்களின் போதும் அரங்கேறும். அதனால் இந்த பெருந்தொற்று காலத்தில் இரண்டு மாநிலங்களிலும் ஒரே மாதிரியான ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தினால்தான் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.