இந்தியாவில் தடுப்பூசிகளின் மீது அதீத தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மட்டுமே இப்போது பயன்பாட்டில் இருக்கிறது. தட்டுப்பாட்டை அதிகரிக்க, இந்த தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகப்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. உடன், வேறு சில தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதுபற்றி இங்கு விரிவாக காண்போம்.
கோவாக்சின் – கோவிஷீல்டு ஆகியவற்றுக்கு பிறகு, 6 தடுப்பூசிகள் இந்தியாவில் விநியோகிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றின் பெயர்கள் மற்றும் அவை ஆகஸ்டு – டிசம்பர் மாதத்துக்குட்பட்ட காலத்துக்குள் தயாரிக்கவோ விநியோகிக்கப்பட்டவோ திட்டமிடப்பட்டிருக்கும் நிதி விவரங்கள் :
- கோவிஷீல்டு – 75 கோடி
- கோவாக்சின் – 55 கோடி
- ஸ்பூட்னிக் வி தடுப்பூசி – 15.6 கோடி
- பயோ இ சப் யூனிட் தடுப்பூசி – 30 கோடி
- சைடஸ் கடிலா டி.என்.ஏ. தடுப்பூசி – 5 கோடி
- எஸ்.ஐ.ஐ. நோவாவாக்ஸ் – 20 கோடி
- பி.பி. நாசல் தடுப்பூசி – 10 கோடி
- ஜெனோவா எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி – 6 கோடி
மொத்தம் – 216.6 கோடி.
இவற்றில், கோவிஷீல்டு, இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டது. இந்தியாவில் புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் இதை தயாரிக்கிறது. இது முதல் அலையில் பரவிய கொரோனாவை, அதிகபட்சமாக 90 சதவிகிதம் இது தடுக்கும் என செயல்திறன் நிரூபிக்கப்பட்டது.
அடுத்ததான கோவாக்சின், இந்திய கண்டுபிடிப்பாகும். இதை கண்டுபிடித்து, தயாரித்து விநியோகிப்பது பாரத் பயோடெக் என்ற நிறுவனம். இந்த தடுப்பூசி, இந்தியாவில் பரவிய கொரோனாவுக்கு எதிராக மட்டுமன்றி இங்கிலாந்து – பிரேசில், ஆகிய இடங்களில் பரவிய கொரோனாவையும் தடுத்தது. அதிகபட்சமாக இதன் செயல்திறன் 81 சதவீதம் வரை செயல்பட்டது. தென்ஆப்பிரிக்க வைரஸுக்கு எதிராகவும் இது செயல்படுமா என்பது பற்றி ஆய்வு நடக்கிறது. இது தற்போது பயன்பாட்டில் உள்ளது.
இவை மட்டுமன்றி ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ரஷியாவின் கமலேயா நிறுவனம் தயாரித்து தருகிறது. கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியாவில் அவசர பயன்பாட்டு ஒப்புதல் பெற்றுள்ள இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி, அதிகபட்சமாக 91.6 சதவீதம் செயல்திறனை கொண்டதென சொல்லப்படுகிறது. இந்தியாவில் இதை டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகம் தயாரித்து வழங்கவிருக்கிறது.
இந்த மூன்று தடுப்பூசிகள் தவிர்த்து, பிற தடுப்பூசி பற்றிய அடிப்படை விவரங்கள் :
* பயோ இ சப் யூனிட் தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல் இ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இது இன்னமும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. அதனால் இதன் செயல்திறன் இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை.
* சைடஸ் கடிலா டி.என்.ஏ. தடுப்பூசி, அகமதாபாத்தை சேர்ந்த சைடஸ் கடிலா என்ற நிறுவனம் உருவாக்கி தயாரிக்கிறது. இது, தன்னுடைய மூன்றாவது கட்ட பரிசோதனையில் உள்ளது. முடிவடையும் நிலையில் இதன் ஆய்வுகள் இருபப்தால், கோவாக்சினுக்கு பிறகு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசியாக இது இருக்கும்.
* நோவாவேக்ஸ் தடுப்பூசியை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. இந்தியாவில் சீரம் நிறுவனம் இதை மொத்தமாக தயாரித்து வழங்கும். இந்தியாவில் இதன் பெயர் கோவோவேக்ஸ் என்றிருக்கும். இது 96.4 சதவீத செயல்திறன் கொண்டதென அமெரிக்காவின் ஆய்வுகள் சொல்கின்றன.
* பாரத் பயோடெக் நிறுவனத்தின் பி.பி. நாசல் தடுப்பு மருந்து, இந்தியாவில் தற்போது முதல் கட்ட பரிசோதனையில் உள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மூக்கின் வழியே செலுத்தும் வகையிலான இந்த தடுப்பு மருந்து, இன்னும் ஆய்வு நிலையில் இருப்பதால், செயல்திறன் உறுதிப்படுத்தப்படவில்லை.
* ஜெனோவா எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை புனேயில் உள்ள ஜெனோவா மருந்து நிறுவனம் உருவாக்கி தயாரித்து அளிக்கும். இது இப்போதுதான் விலங்குகள் மத்தியில் சோதிக்கப்பட்டுள்ளது. இனிதான் பிற ஆய்வுகள் தொடங்கக்கூடும்.
மேற்கண்ட 8 தடுப்பூசிகள் மட்டுமன்றி, உலகளவில் அதிகம் பேருக்கு செயல்பட்டதும், அதிகம் செயல்திறன் கொண்டவையாக இருக்கும் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய விலை அதிகமான 3 தடுப்பூசிகளையும் கூடுதலாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யவும் மத்திய உயிரிதொழில்நுட்பத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தகவல் உறுதுணை : India Today