ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி தற்காலிக நிறுத்தம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து முதல்கட்டமாக 4.8 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு நேற்று, நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆக்ஸிஜன் பிளான்டில் குளிர்பதன பெட்டியில் ஏற்பட்ட கசிவு காரணமாக ஆக்ஸிஜன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அக்கோளாறு சரி செய்யப்பட்டு 2 முதல் 3 நாட்களுக்குள் மீண்டும் ஆக்ஸிஜன் உற்பத்தி துவங்கும் என ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்டாலின் அறிவிப்பு..!
தி.மு.க. சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை ‘முதலமைச்சர் பொது நிவாரண நிதி’க்கு வழங்குவார்கள் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் கொரோனா நிலவரம்..!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 3,43,144 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,40,46,809 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,000. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,62,317-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,00,79,599-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 37,04,893 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,44,776 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.
இந்தியாவில் இதுவரை 17,92,98,584 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.