மத்திய அமெரிக்காவின் குவாத்தமாலா குடியரசில் Pacaya எரிமலையின் தீப்பிழம்பில் பீட்சா தயார் செய்யப்படுகிறது. இந்த எரிமலை அவ்வபோது தீப்பிழம்புகளை கக்கி வருகிறது. அதனால் அதிகாரிகள் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரித்துள்ளனர். இந்நிலையில் அந்த மலையின் உச்சி பகுதியிலிருந்து அடிவாரத்திற்கு வழிந்து வரும் எரிமலை தீப்பிழம்புகளை சமையலறையாக மாற்றி பீட்சா தயாரித்து அசத்துகிறார் 34 வயதான கணக்கு பதிவாளர் டேவிட் கார்சியா.
சுமார் ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கக்கூடிய பாத்திரத்தை இதற்கென உருவாக்கி அதன் மூலம் பீட்சா தயாரித்து வருகிறார் அவர். இதற்கு Pacaya பீட்சா என பெயரும் வைத்துள்ளார். இந்த செய்தியை அறிந்த மக்கள் தற்போது அவர் தயாரிக்கும் பிட்சாவை ருசிக்க ரசனையுடன் கூடி வருகின்றனர்.
டொமேட்டோ சாஸ், சீஸ் மற்றும் இறைச்சியை கொண்டு பீட்சா தயாரிக்கிறார் அவர். “பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து கொண்டு எரிமலையிலிருந்து வழிந்தோடும் தீப்பிழம்புகளில் பீட்சா தயாரித்து வருகிறேன். இதன் மணமும், ருசியும் அருமை என எங்களது பீட்சாவை ருசித்தவர்கள் சொல்லி வருகின்றனர்” என மாறா புன்னகையுடன் சொல்கிறார் டேவிட் கார்சியா.
இது இயற்கை ஓவன். 800 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் உருவாகிறது இந்த பீட்சா.