12 முதல் 15 வயது குழந்தைகளுக்கு ஃபைசர் -பயோஎன் டெக் தடுப்பூசியை செலுத்த அமெரிக்க அரசுஅனுமதி அளித்துள்ளது.
அமெரிக்கா நேற்று ஃபைசர் – பயோஎன் டெக் கொரோனா தடுப்பூசியை 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு செலுத்த அனுமதியளித்துள்ளது.
அமெரிக்காவில் முதன் முறையாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள இந்த முயற்சி மிக முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பாக மீண்டும் பள்ளிக்குச் செல்லமுடியும் என சொல்லப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறும் போது, “ மாநிலங்கள் உடனடியாக குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்” என்றார்.
இது குறித்து தற்காலிக எஃப்.டி.ஏ ஆணையர் டாக்டர் ஜேனட்உட் காக் கூறும் போது, “ அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் இளைய தலைமுறையினர் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுவர். பெற்றோரும் பாதுகாவலர்களும் மிகவும் உறுதியாக இருக்கலாம். அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் அனைத்து தரவுகளும் முழுமையாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
ஃபைசர் நிறுவனம் கூறும் போது, “ இந்த தடுப்பூசி 12 முதல் 15 வயது குழந்தைகளுக்கு மிக நன்றாக வேலை செய்கிறது என்பதை கடந்த மார்ச் மாதம் கண்டறிந்தோம்” என்றது.