பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமை சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக தேர்வு செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி.
மாதம்தோறும் சிறப்பான பங்களிப்பை கிரிக்கெட் விளையாட்டில் அர்ப்பணித்து வரும் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை கவுரப்படுத்தி வருகிறது ஐசிசி. அந்த வகையில் இந்த முறை பாபர் சிறந்த வீரருக்கான விருதை தட்டியுள்ளார். இதன் மூலம் இந்த விருதை வென்ற முதல் இந்தியர் அல்லாத சர்வதேச கிரிக்கெட் வீரரானார் பாபர்.
இதற்கு முன்னதாக ரிஷப் பண்ட் (ஜனவரி), அஷ்வின் (பிப்ரவரி) மற்றும் புவனேஸ்வர் குமார் (மார்ச்) என இந்திய கிரிக்கெட் வீரர்களே இந்த விருதை வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார் பாபர். சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த பேட்ஸ்மேன் தரவரிசையில் பாபர் முதல் இடத்தில் உள்ளார். அதேபோல டெஸ்ட் மற்றும் டி20 பட்டியலிலும் டாப் 10 இடத்திற்குள் அவர் உள்ளார்