எம்.எல்.ஏ-வாக பதவியேற்ற ஸ்டாலின்!
இன்று காலை 16 -வது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் தொடங்கியது. தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்களுக்கு தற்காலில சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். முதலில் முதல்வர் ஸ்டாலின் எம்.எல்.ஏ வாக பதவி ஏற்று கொண்டார். அவரை தொடர்ந்து அவை முன்னவரான துரைமுருகன் பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ-க்களும் பதவியேற்று கொள்கிறார்கள். நாளை நடைபெறும் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்ர் தேர்வுக்கு, சபாநாயகர் பதவிக்கு அப்பாவு எம்.எல்.ஏவும் துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நாளை இருவரும் போட்டியின்று தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 3,29,942 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,29,92,517 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,876. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,49,992-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,90,27,304-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 37,15,221பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,56,082 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.
இந்தியாவில் இதுவரை 17,27,10,066 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
நீலகிரி: `நாளொன்றுக்கு 2 ஆயிரம் நபர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்படும்!’
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, “ஒரு நாளைக்கு 2 ஆயிரம் நபர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்படும். குன்னூரில் உள்ள பாஸ்டியர் ஆய்வகத்தில் இருந்து புதிதாக இயந்திரம் ஒன்றும் வாங்கப்பட்டுள்ளது. ஆக்ஸிஜனைப் பொருத்தவரை எந்த பற்றாக்குறையும் இல்லை. தொற்றை குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்”என்றார்.
16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பதவியேற்றார். இதனை தொடர்ந்து தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (11-05-2021) நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர். தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றிருக்கும் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ-க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
இதற்காக அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை (12-05-2021) சபாநாயகர், மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற இருக்கிறது.