தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்புப் பணிக்கு அமைச்சர்கள் குழு நியமனம் செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் இந்த அமைச்சர்கள் குழுவை நியமித்துள்ளார்.
சென்னை மாவட்டத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நியமிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மதுரை மாவட்டத்திற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன் வளம்- மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்திற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திருச்சி மாவட்டத்திற்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்திற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திற்கு வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, திருப்பூர் மாவட்டத்திற்கு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், வேலூர் மாவட்டத்திற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.