பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்த நிலையில் தனது கணவரின் உடலுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடலை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அப்பெண்ணிடம் மாற்றி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலகிருஷ்ணன் மனைவி சங்கீதா

பட்டுக்கோட்டை கீழப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(46) கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி சங்கீதா(38) இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும்,12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி பாலகிருஷ்ணனுக்கு உடல் நிலை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாலகிருஷ்ணனை அவரது மனைவி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாலகிருஷ்ணன் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனை தொடர்ந்து டாக்டர்கள் அவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 6-ம் தேதி அதிகாலை பாலகிருஷ்ணன் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முகத்தை மூடிய நிலையில் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்

பின்னர் பட்டுக்கோட்டையில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து சென்று இறுதி காரியத்திற்கான ஏற்பாட்டை செய்தனர். அப்போது பாலகிருஷ்ணன் மகன் ரோகேஷ் அப்பா முகத்தை கடைசியா ஒரு முறை பாத்துக்குறேன் என கண் கலங்கியிருக்கிறார். பின்னர் அங்கிருந்தவர் துணியை விலக்கி முகத்தை காட்ட, `அய்யோ இது என் அப்பா இல்லை’ என ரோகேஷ் கதற அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பின்னரே மருத்துவ கல்லூரியில் உடலை மாற்றி கொடுத்துள்ளது தெரிய வந்துடன், உடனே மாறி வந்த உடலை எடுத்து கொண்டு மருத்துவக் கல்லூரிக்கு வந்து முறையிட்டுள்ளனர்.

அப்போது மருத்துவமனையில் அலட்சியமாக பதில் கூறியதாக சொல்லப்படுகிறது. இறந்து போன கணவரின் உடல் என்ன ஆனது அவருக்கு செய்ய வேண்டிய காரியத்தையும் செய்ய முடியால் சங்கீதா தனது இரு பிள்ளைகளுடன் கதறி கொண்டு இருக்கிறார். ஆனால் மருத்துவக் கல்லூரி நிர்வாகமோ இதனை அலட்சியமாக நினைத்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மகனுடன் பாலகிருஷ்ணன்

இது குறித்து சங்கீதாவிடம் பேசினோம், “நல்லா இருந்த என் கணவருக்கு திடீரென உடம்புக்கு முடியாம போச்சு. பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். ஆனால் முடிவுகள் வருவதற்குள்ளேயே கொரோனா பாசிட்டிவ் என கூறி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சேர்ந்ததும் புதிதாக என் கணவருக்கு எந்த டெஸ்டும் எடுக்கவில்லை. மேலும் மூன்று மணி நேர காத்திருப்புக்கு பின்னரே எங்களுக்கு பெட் கிடைத்தது. முறையான சிகிச்சை எதுவும் எடுக்கவில்லை. அவ்வப்போது ஆக்ஸிஜன் மட்டும் கொடுத்து வந்தனர். மருந்து, மாத்திரை கூட ஒழுங்காக தரவில்லை. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் எனக்கு வசதியில்லை. என் கணவர் பொழச்சா போதும்னு எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டேன்.

ஆனால் 6-ம் தேதி காலை என் கணவர் என்னையும், புள்ளங்களையும் விட்டுட்டு போய் சேர்ந்துட்டார். உடனே உடலை பிரேத பரிசோதனைக்காக மார்ச்சுவரிக்கு எடுத்து சென்றனர். அப்பதான் அவர் முகத்தை கடைசியா பார்த்தேன். பார்மலிட்டிஸ் முடிஞ்ச பிறகு முகத்தை மூடி உடலை எங்களிடம் ஒப்படைத்தனர். குடும்பத்தை கவனித்து வந்தவரின் உயிரை பறிகொடுத்துட்டு நாங்க கலங்கி நின்னோம். ஆனால் ரூ 1,000 கொடுத்த பிறகே உடலை எங்ககிட்ட கொடுத்தாங்க.

ம்களுடன்

சரினு நொந்து கொண்டு உடலை பட்டுக்கோட்டைக்கு எடுத்து சென்றோம். அங்கு சுடுகாட்டில் இறுதி காரியம் செய்வதற்கான அனைத்தையும் உறவினர்கள் செய்தனர். அப்ப என் மகன் கடைசியாக அப்பாவின் முகத்தை பார்க்க ஆசைப்பட்டு கண்கள் கலங்க கேட்டிருக்கிறான். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்ததால் உடலை சுற்றி மூடப்பட்டிருந்த துணியை விலக்கி முகத்தை காண்பித்தனர். அப்போது என் மகன் உட்பட அங்கிருந்த அனைவரும் அதிர்ர்சியடைந்தனர். மருத்துவக் கல்லூரியில் என கணவரின் உடலை மாற்றி கொடுத்து விட்டனர்.

பதறிய அனைவரும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் சொல்லிட்டு மாறிய உடலை எடுத்து கொண்டு மீண்டும் சென்றனர். மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்த உடல்களில் என கணவர் உடல் இல்லை. பணியிலிருந்தவர்கள், `உடலை காணவில்லை என்னாச்சுனு தெரியலனு’ ஒத்த வார்த்தையில் பதில் சொன்னார்கள். என் கணவரின் உடலை வேறு யாருக்காவது மாற்றி கொடுத்து விட்டார்களா எங்களிடம் ஒப்படைத்தது யார் உடல் என எந்த கேள்விக்கும் அவர்களிடத்தில் பதில் இல்லை.

பாலகிருஷ்ணன் மனைவி சங்கீதா

ஆனால் நிர்வாகத்தின் தரப்பில் வந்த டாக்டர்கள் எங்களை சமாதானம் செய்து அனுப்பும் நோக்கத்திலேயே செயல்பட்டதுடன் அடுத்த நாள் வர சொல்லி அனுப்பி வைத்தனர். மூன்று நாள் ஆகுது எந்த நடவடிக்கையும் இல்லை.கொரோனாவுக்கு கணவரை பறிகொடுத்த துர்பாக்கிய நிலை ஒரு பக்கம் என்னையும் என் பிள்ளைகளையும் கலங்கடிக்கிறது. அவருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை இன்னும் செய்யாமல் எங்க வீட்டுக்கும் செல்ல முடியாமல் தஞ்சாவூரில் உள்ள அண்ணன் வீட்டில் முடங்கியிருக்கிறோம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அலட்சியமே இதற்கு காரணம். என் கணவர் உடல் எனக்கு வேண்டும் அவர் முகத்தை நானும் என் பிள்ளைகளும் கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் இதற்கான ஒரு தீர்வை எனக்கு தர வேண்டும் என கண்ணீர் விட்டார்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தில் விசாரித்தபோது “இது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக” தெரிவித்தனர்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.